*வெற்றிகரமாக நடத்திய மருத்துவர்களுக்கு கமிஷனர் பாராட்டு
சேலம் : சேலத்தில் விபத்தில் சிக்கிய கைரேகை பிரிவு ஏட்டுக்கு, மூளையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினருக்கு மாநகர போலீஸ் கமிஷனர், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.சேலம் மாநகர நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றும் எஸ்எஸ்ஐக்கள், ஏட்டுகளுக்கு வாரம் தோறும் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி அறிவுரைகளை வழங்குவார்.
அந்நேரத்தில் அவர்களின் பகுதியில் நடக்கும் விவரங்களை ஒவ்வொருவரும் தெரிவிப்பார்கள். இதன்படி, நேற்று நடந்த கூட்டத்தில், அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேசன் எஸ்.எஸ்.ஐ. சரவணன், மாவட்ட ரேகை பிரிவு ஏட்டு விஜயகுமார்(36) விபத்தில் சிக்கிய விவரத்தை கூறினார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு, குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை ரோட்டில் நடந்து வந்த விஜயகுமார் மீது ஆட்டோ ஒன்று மோதியது. இதில் கீழே விழுந்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த ஆட்டோ டிரைவரே, அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
உடனடியாக மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் சிறுமூளையில் ரத்தம் கசிந்தது தெரியவந்தது. உடனடியாக அவரது மனைவி மற்றும் பெற்றோரிடம் அனுமதி பெற்று, மண்டையை பிளந்து அறுவை சிகிச்சை செய்தனர். இந்த அறுவை சிகிச்சை ெவற்றிகரமாக அமைந்தது. இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால், தனியார் மருத்துவமனையில் குறைந்தது ரூ.50 லட்சம் செலவு செய்ய வேண்டும்.
ஆனால் அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டது. இதற்கிடையில், அவரது பெற்றோர் ஏட்டு விஜயகுமாரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், இதற்கு முன்பாக எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்தீர்கள் என கேட்டுள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் நடந்தது என்ற விவரத்தை தெரிவித்தனர். அந்த மருத்துவமனை டாக்டர்களோ, இந்த அறுவை சிகிச்சை மிகவும் அற்புதமாக செய்துள்ளனர் என்று பாராட்டு தெரிவித்துள்ளனர் என்றார்.
இந்த விவரத்தை உன்னிப்பாக கேட்ட போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, அரசு மருத்துவமனையில் இவ்வளவு அற்புதமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதா என ஆச்சரியத்துடன் கேட்டார்.
உடனடியாக அந்த மருத்துவ குழுவினரை பார்க்க வேண்டும் என கூறியதுடன், கூட்டத்தை உடனே முடித்துக்கொண்டு, நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோருடன் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.
அங்கு அறுவை சிகிச்சை நிபுணர் சங்கர் உள்ளிட்ட 8 பேருக்கு, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன், நினைவு பரிசையும் வழங்கி பாராட்டினார். இதனால் டாக்டர் குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர்.
