ஊட்டி,மார்ச்27: ஊட்டி நகரில் கமர்சியல் சாலை, லோயார் பஜார் சாலை, மாரியம்மன் கோயில் சாலை உள்ளிட்ட இடங்களில் பார்க்கிங் உள்ளது. ஐந்து லாந்தர்,மார்க்கெட் பகுதியில் உள்ள உள்ள பார்க்கிங் இடங்களில் தங்கள் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தும் மார்க்கெட் வியாபாரிகள் பின்பு இரவில்தான் எடுக்கின்றனர். இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த முடியாமல், சாலையோரங்களில் நிறுத்தி சென்று விடுகின்றனர்.
இதன் காரணமாக அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. எனவே போக்குவரத்திற்கு இடையூறாக தாறுமாறாக வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி போதுமான பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
