திருப்பரங்குன்றம், மார்ச் 27: திருப்பரங்குன்றம் அருகே வாலிபரை மிரட்டி நகை, செல்போன், பணம் பறித்துச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை, திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி நகரை சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் நாகேந்திரன்(27). இவர் சம்பவத்தன்று துவரிமான் முத்தையா கோயில் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி நாகேந்திரனை மிரட்டியுள்ளார். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்க செயின், கையில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரொக்கம் ரூ.9500 ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து நாகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.
