சீட் கேட்டு திடீர் நெருக்கடி: மியூசிக்கல் சேர் வெல்வது யார்…? அக்காவா? தம்பியா?

அதிமுக கூட்டணியில், கடந்த தேர்தலில் பாஜவுக்கு கோவையில் ஒரே ஒரு தொகுதி கோவை வடக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குதான் பிரச்னை வெடித்துள்ளது. கோவை பாஜவின் முகமாக முன்பு வானதி சீனிவாசன் இருந்தார். அண்ணாமலை, களத்துக்கு வந்தபிறகு கோவையில் கோலோச்சுவது யார்? என்று இவர்களிடையே பனிப்போர் வெடித்தது. இந்த சூழலில், கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிடப் போவதாக வெளியான தகவலை தொடர்ந்து வானதி சீனிவாசன் போட்டியிட மறுத்து கோவை வடக்கு தொகுதிக்கு மாறப் போவதாக அவர் பாஜ தலைமையை வலியுறுத்தினாராம்.

இதனால், அண்ணாமலைக்கு இந்த முறை சீட் கிடைக்கும் என்று கேள்வி எழுந்தது. சீட் கொடுக்காமல் தலைமை கல்தா கொடுத்தால், நமது இமேஜ் காலியாகி என்று எண்ணிய அண்ணாமலை, தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஒரு தகவலை கசிய விட்டார். தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறி வந்த அண்ணாமலை, தற்போது கட்சி தலைமை உத்தரவிட்டால் களம் இறங்குவேன் என்று அறிவித்துள்ளார். அவர் விரும்பிய கவுண்டம்பாளையம், கிணத்துகடவு அதிமுகவுக்கு சென்று விட்டதால், கோவை வடக்கு தொகுதிக்கு குறி வைத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த தொகுதியில் சீட் கேட்டு நெருக்கடியும் அண்ணாமலை கொடுத்து வருகிறாராம். அதேசமயம், வானதி சீனிவாசன், தனது சிட்டிங் தொகுதியான கோவை தெற்கு தொகுதிக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டு, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கோவை வடக்கு தொகுதியில் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். தமிழக பாஜ மற்றும் அதிமுக தலைமையிடமும் பேசி, கோவை வடக்கு தொகுதியை அவர் ரிசர்வ் செய்தாராம். தற்போது கோவை வடக்கு தொகுதி பக்கம் அண்ணாமலையும் கவனம் செலுத்தியுள்ளார். இதை கைப்பற்ற தம்பிக்கும், அக்காவுக்கும் இடையே மியூசிக்கல் சேர் போட்டி நடக்குதாம்.

தேர்தலில் போட்டியில்லை என ஒதுங்கும் மனநிலைக்கு வந்தவர் அப்படி செய்தால் கோவையில் தனக்கு செல்வாக்கு இல்லை என்று எடப்பாடியிடம் தோற்றுவிட்டதற்கு ஒப்பாகும் என்று கருதி மீண்டும் வடக்கு தொகுதிப்பக்கம் திரும்பியுள்ளாராம். அதேசமயம் வானதி, வடவள்ளி, கணபதி, சாயிபாபாகாலனி என பகுதி வாரியாக நிர்வாகிகளை நியமித்து, ஏற்கனவே பணிகளை தீவிரப்படுத்தி விட்டார். கோவை வடக்கு தொகுதியை, எனக்கே உறுதிசெய்யுங்கள்… என டெல்லி மேலிடத்திலும் வானதி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.

ஆனால், அண்ணாமலையோ, “கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில், நான் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டேன். அப்போது இத்தொகுதிக்கு உட்பட்ட கோவை வடக்கில் 71,174 வாக்குகள் பெற்றேன். இம்முறை அதைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன்… எனவே எனக்குத்தான் ‘சீட்’ வழங்க வேண்டும்” என்று அண்ணாமலை கேட்கிறாராம். இதில், பாஜ தலைமை முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் அண்ணாமலை அப்செட் ஆகியுள்ளார். “தம்பியா.. அக்காவா..? ஜெயிக்கப்போவது யாரு…? என்பது விரைவில் தெரியும்.

* ‘வானதிக்கு சீட் கொடுத்தால் தேர்தலை புறக்கணிப்போம்’
பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலைக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது. இது அவரது ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அண்ணனா?, அக்காவா? அண்ணன் தான் முக்கியம்.

பாஜ எனும் குடும்பத்தை தலைநிமிர செய்து மரியாதையை உருவாக்கிய அண்ணாமலைக்கு மட்டுமே தேர்தல் பணி செய்வோம். ஏற்கனவே போட்டியிட்டு சொந்த தொகுதி மக்கள் பக்கமே எட்டிபார்க்காத மக்கள் ஆதரவை இழந்தவர்களுக்கு தேர்தல் பணி அல்ல. வானதி சீனிவாசன் ஏற்கனவே வெற்றி பெற்ற கோவை தெற்கு தொகுதியில் எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் செய்யவில்லை. அவர் தன்னை மட்டுமே முன்னிறுத்தி கொண்டார்.

தேர்தல் தோல்வி பயம் காரணமாக கோவை வடக்கு தொகுதிக்கு மாற திட்டமிட்டு, கடந்த 6 மாதங்களாக தேர்தல் பணிகளை செய்து வருகிறார்.அண்ணாமலை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு கோவை தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்தார். அண்ணாமலைக்கு கோவை வடக்கு தொகுதியை ஒதுக்க வேண்டும். வானதி சீனிவாசனுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால், நாங்கள் தேர்தல் பணிகளை செய்யாமல் புறக்கணிப்போம்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: