சொன்னாரு: நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் நீண்டகாலமாக இருந்த நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, ஊழலற்ற மற்றும் வாசகர்களுக்குத் தேவையான நூல்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை உருவாக்கும் வகையில், பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
செஞ்சாரு: தமிழகத்தில் பொது நூலகத் துறையின்கீழ் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4,500க்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகின்றன. அரசு நூலகங்களில் பொதுமக்கள் படிப்பதற்காக தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள், பொது அறிவு புத்தகங்கள், இலக்கியம் உள்பட பல்வேறு விதமான புத்தகங்கள், குறிப்பு நூல்கள் இருக்கும். பொதுமக்கள் செலுத்தும் சொத்து வரியில் 10 சதவீதம் நூலக வரியாக சென்றுவிடும்.
இந்த நூலக வரியில் இருந்து கிடைக்கும் தொகை மற்றும் கொல்கத்தாவில் உள்ள ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை ஆண்டுதோறும் தோராயமாக வழங்கும் ரூ.6 கோடி மானிய உதவியைக் கொண்டும் அரசு நூலகங்களுக்கு ஆண்டுதோறும் புதிய புத்தகங்கள் வாங்கப்படுகின்றன. தேர்வுக்குழுவால் எந்தெந்த புத்தகங்கள் தேர்வுசெய்யப்படுகின்றன? எந்தெந்த பதிப்புகளுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது? என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படுவது கிடையாது. 2010, 2011ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் வாங்குவதற்கு அரசு ரு.30 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிகிறது.
புத்தகங்கள் வழங்குவதற்காக கிட்டதட்ட 1,200 பதிப்பகங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த புத்தக கொள்முதலில், கமிஷன் கொடுத்த பதிப்பகங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், கமிஷன் கொடுக்காத காரணத்தினால் தரமான புத்தகங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னணி பதிப்பக நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், கடந்த காலங்களில் நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றதாக தொடர் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கான அறிவிப்பை 2023-24ம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 3,873 பொது நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கான ஆணை கடந்த 2025ம் ஆண்டு மே 15ம் தேதி வெளியிடப்பட்டது.
இதன் மூலம் சுமார் 6,416 தலைப்புகளில் 22 லட்சத்திற்கும் அதிகமான புத்தகப் பிரதிகள் கொள்முதல் செய்யப்பட்டன. வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் கொள்கை-2024 கொள்கையின்படி நூலகங்களுக்கு தேவைப்படும் புத்தகங்கள், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்களை வெளிப்படைத்தன்மையுடன் கொள்முதல் செய்யும் வகையில் ஒரு பிரத்யேக இணையதளம் (https://bookprocurement.tamilnadupubliclibraries.org/) ஏற்படுத்தப்பட்டது.
இந்த தளத்தின் வழியாக விண்ணப்பித்த 414 பதிப்பாளர்களின் புத்தகங்கள், நூல் தேர்வுக் குழுவின் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவற்றில் தகுதியான நூல்கள் தேர்வு செய்யப்பட்டு பதிப்பாளர்களிடம் நூல் விலைக் குறைப்பு பேச்சுவார்த்தை இணையவழியில் நடத்தப்பட்டது. இறுதியாக தேர்வு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன.
அதிலிருந்து நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை அந்தந்த வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் நூலகர்களே தேர்வு செய்தனர். இதன்மூலம் தரமற்ற புத்தகங்கள் நூலகங்களுக்கு கொள்முதல் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ரூ.40 கோடியில் 6,416 தலைப்பிலான புத்தகங்களின் 22 லட்சத்து 17,379 பிரதிகளுக்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பதிப்பாளர்களிடம் இருந்து அனைத்து புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டு சென்னையில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டது.
அங்கிருந்து மாவட்ட வாரியாக உள்ள பொது நூலகங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வெளிப்படையான முறையில் நூல்கள் கொள்முதல் செய்யப்படுவது நூலகர்கள், வாசகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் மட்டுமல்லாமல், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் என பலரும் பயனடைந்துள்ளனர்.
