தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15ம் தேதி வெளியானதிலிருந்து அரசியல் களம் ஒரு ‘மின்னல் வேக’ பந்தயத்திற்குத் தயாராகிவிட்டது. அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யப் போராடிக் கொண்டிருக்க, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணையோ வேட்பாளர்களுக்குப் பெரும் ‘நேர நெருக்கடியை’ வழங்கியுள்ளது. 2021 தேர்தலோடு ஒப்பிடுகையில், இந்த 2026 தேர்தல் களம் ஏன் ‘மின்னல் வேகம்’ என்று அழைக்கப்படுகிறது?
* இதோ ஒரு சுவாரஸ்யமான நேரப் பகுப்பாய்வு:
வேட்புமனுத் தாக்கலில் ‘மின்னல்’ வேகம்: வெறும் 16 மணிநேரம் மட்டுமே! வேட்புமனுத் தாக்கலுக்கான கால அவகாசம் இந்த முறை வேட்பாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. 2021-ல் மார்ச் 12 முதல் 19 வரை மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் இடையில் ஒரு ஞாயிறு மட்டுமே விடுமுறையாக இருந்ததால், வேட்பாளர்களுக்கு 7 முழு வேலை நாட்கள் கிடைத்தன. 2026ல் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை 8 நாட்கள் அவகாசம் இருந்தாலும், மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி),
ஏப்ரல் 1 (வங்கி கணக்கு முடிக்கும்நாள்), ஏப்ரல் 3 (புனித வெள்ளி) மற்றும் ஏப்ரல் 5 (ஞாயிறு) என 4 முக்கியப் பொது விடுமுறை நாட்கள் குறுக்கிடுகின்றன. வேட்பாளர்களுக்கு மனுத் தாக்கல் செய்யக் கிடைப்பது வெறும் 4 வேலை நாட்கள் மட்டுமே! ஒரு நாளைக்கு 4 மணிநேரம் (காலை 11 – மாலை 3) எனப் பார்த்தால், ஒட்டுமொத்தமாக 16 மணிநேரத்திற்குள் 234 தொகுதிகளின் வேட்பாளர்களும் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்தாக வேண்டும். கடந்த முறையை விட இது 12 மணிநேரம் குறைவு.
* பிரசாரக் களம்: 14 நாட்களிலிருந்து 12 நாட்களாகச் சுருக்கம்!
தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான பிரசாரக் காலத்திலும் தேர்தல் ஆணையம் மின்னல் வேகத்தைக் காட்டியுள்ளது. 2021ல் வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்ட மார்ச் 22 முதல் ஏப்ரல் 4 மாலை வரை வேட்பாளர்களுக்குத் தீவிர பிரசாரம் செய்ய முழுமையாக 14 நாட்கள் கிடைத்தன. 2026-ல் வேட்புமனுக்கள் திரும்பப் பெற கடைசி நாளான ஏப்ரல் 9-க்குப் பிறகு, ஏப்ரல் 21 மாலை 6 மணி வரை மட்டுமே பிரசாரத்திற்கு அனுமதி உண்டு.
அதாவது சரியாக 12 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. தொகுதி முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நேரில் சந்திக்க வேண்டிய வேட்பாளர்களுக்கு, இந்த 2 நாட்கள் குறைவு என்பது மிகப்பெரிய இழப்பாகும். இதனால் ஒரு நாளைக்கு 18 மணிநேரத்திற்கு மேல் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு வேட்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
* காத்திருப்பு காலத்தில் 15 நாட்கள் மிச்சம்!
வேட்புமனு மற்றும் பிரசாரத்தில் நேரத்தைக் குறைத்த தேர்தல் ஆணையம், வாக்கு எண்ணிக்கைக்கான காத்திருப்புக் காலத்தில் மிகப்பெரிய ‘நிம்மதியை’ வழங்கியுள்ளது. 2021-ல் வாக்குப்பதிவு முடிந்து (ஏப் 6) முடிவுகள் வெளியாக (மே 2) 26 நீண்ட நாட்கள் ஆனது. 2026ல் ஏப்ரல் 23ல் வாக்குப்பதிவு முடிந்து, மே 4-ல் ( 11 நாட்களில்) முடிவுகள் தெரிந்துவிடும். கடந்த முறையை விட 15 நாட்கள் முன்னதாகவே முடிவுகள் வெளியாகின்றன. 26 நாட்கள் நீடித்த ‘திக் திக்’ நிமிடங்கள் 11 நாட்களாகக் குறைக்கப்பட்டது வேட்பாளர்களுக்குப் பெரும் நிம்மதி.
* ஏன் இந்த அதிரடி வேகம்?
தமிழகத்தின் அக்னி நட்சத்திர வெயில் மே 4ல் தொடங்குவதால், அதற்கு முன்பே வாக்குப்பதிவை நடத்தி முடிப்பதன் மூலம் வாக்காளர் வருகையை அதிகரிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மேலும், மிக நீண்ட காலத் தேர்தல் நடைமுறைகளால் அரசுப் பணிகள் முடங்குவதைத் தவிர்க்க இந்த முறை மின்னல் வேகம் காட்டப்பட்டுள்ளது. மே 4 வரை நடக்கும் இந்தப் பயணம், ‘நேரம்’ என்பது எவ்வளவு விலையுயர்ந்தது என்பதை வேட்பாளர்களுக்குப் புரிய வைக்கும் ஒரு மின்னல் வேகத் தேர்தலாக இருக்கும்.
