சென்னை: விஜயை ஆதரிக்கும் பெண்களை விமர்சித்ததாக அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏடிஜிபியிடம் தவெக தலைவர் விஜய் புகார் அளித்துள்ளார். அப்துல்கலாமின் ஆலோசராக பணிபுரிந்த அரசியல் விமர்சகர் பொன்ராஜ் ஊடகம் ஒன்றில் பேசியபோது படிப்பறிவில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் ஒரு தற்குறி கூட்டம் இருக்கிறது என்பதை காட்டிக்கொடுத்த விஜய்க்கு நன்றி சொல்ல வேண்டும். இவர்கள் வரைமுறை இல்லாத தற்குறி கூட்டம். புருஷன் எனக்கு தேவையில்லை விஜய்தான் வேண்டும் என சொல்லும் அளவுக்கு ஒரு கூட்டம்.
சகோதரியாக இருப்போம். விஜய்க்கு மனைவியாகவும் இருப்போம் என்று சொல்லும் ரசிகைகள் கூட்டம் என விமர்சித்திருந்தார். இந்நிலையில், பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று இரவு வந்தார். அப்போது டிஜிபி வெங்கட்ராமன் அலுவலகத்தில் இல்லை. இதனால் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாளைச் சந்தித்து புகார் கடிதத்தை அளித்தார். அப்போது அவருடன் செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
டிஜிபியிடம் விஜய் அளித்த புகார் கடிதத்தில் கூறியுள்ளதாவது; பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவே பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார். தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பொன்ராஜ் என்கிற இந்த நபர் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.
இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறுகையில், ‘‘யூடியூப் மூலமாக தரம் தாழ்ந்த வார்த்தைகளைக் கூறி, பெண்களை கேவலமாக இழிவாக பொன்ராஜ் பேசியிருப்பது பற்றி டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவரே விரைந்து வந்து புகார் அளித்துள்ளார். டிஜிபி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார்’’ என்றார்.
