திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் 890 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை கடந்த தேர்தலை விட 67 வேட்பாளர்கள் குறைந்துள்ளனர். கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 16ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 23ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2023 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். 24ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. நேற்று வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும். 500க்கும் மேற்பட்ட சுயேட்சை மற்றும் போட்டி வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதிக்கட்ட நிலவரப்படி தற்போது 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோழிக்கோடு மாவட்டம் கொடுவள்ளி தொகுதியில் தான் மிக அதிகமாக 13 பேர் போட்டியிடுகின்றனர். திருவனந்தபுரம், பேராவூர் மற்றும் மஞ்சேஸ்வரம் ஆகிய தொகுதிகளில் தலா 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் 957 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தற்போது அதைவிட 67 வேட்பாளர்கள் குறைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
