சென்னை: பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, அன்புமணி பதில் தருமாறு உத்தரவிட்டுள்ள சென்னை உரிமையியல் நீதிமன்றம், இன்று இரு தரப்பும் வாதிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நிறுவனர் ராமதாசை தலைவராகவும், அவர் நியமித்த நிர்வாகிகளையும் அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். உள்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, பாமக சின்னமான மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உள் கட்சி விவகாரம் தொடர்பாக உரிமைகள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என கூறி ராமதாசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாம்பழம் சின்னம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய ராமதாஸ் தரப்புக்கு உத்தரவிட்டது. அந்த மனுவை விசாரித்து மூன்று நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உரிமையியல் நீதிமன்றத்துக்கும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, தன்னை கட்சியின் தலைவராக அறிவிக்க கோரியும், வழக்கு முடியும்வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க கோரியும் டாக்டர் ராமதாஸ் தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு நாளை (இன்று) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அன்புமணி தரப்புக்கு உத்தரவிட்டார். மேலும், பதில் மனு தாக்கல் செய்தவுடன் இரு தரப்பு வாதங்களும் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.
