சென்னை: சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான பட்டியலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். தமிழகத்தில் ஏப்.23ம்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிந்து வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகாவுக்கு 5, ஐஜேகேவுக்கு 2, தமமுகவுக்கு 1, புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.
அதில் பாமவுக்கு சேலம் தெற்கு, விக்கிரவாண்டி, சோளிங்கர், தருமபுரி, பென்னாகரம், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், ரிஷிவந்தியம், கீழ்வேளூர், பெரம்பூர், செஞ்சி, காட்டுமன்னார்கோவில், சேலம் வடக்கு, அம்பத்தூர், விருத்தாச்சலம் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல் கட்டமாக 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் ஏப்.23ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது முதற்கட்டமாக 3 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள். அதன்படி, கீழ்வேளூர் தொகுதியில் ச.வடிவேல் ராவணன், அம்பத்தூர் தொகுதியில் கே.என்.சேகர், செஞ்சி தொகுதியில் அ.கணேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
