புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது:எல்பிஜி காஸ் மற்றும் எரிசக்தி நெருக்கடி ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கான மோடியின் மக்கள் திசைதிருப்ப மகளிர் இடஒதுக்கீடு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.நாரி வந்தன் அதினியம் மசோதா(பெண்கள் இடஒதுக்கீடு 2023),மக்களவை, சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. அப்போது, தொகுதி மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிக்காமல் இதை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று அரசு அப்போது தெரிவித்தது.
பல்டி அடிப்பதில் வல்லவரான மோடி 30 மாதங்களுக்கு பின் இப்போது தனது மனநிலையை மாற்றி கொண்டு தொகுதி மறுவரையறை முடிக்காமல்,மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்காமல் பெண்கள் இடஒதுக்கீட்டை செயல்படுத்த விரும்புகிறார். இப்போது சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் ஆதாயத்துக்காக அவர்(மோடி), நாரி வந்தன் அதினியம் 2023 மசோதாவில் தேவையான திருத்தங்களை செய்ய அடுத்த 2 வாரங்களில் இரண்டு நாள் சிறப்பு அமர்வு கூட்டப்படும் என்று அறிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டம் தேர்தல் நடத்தை விதியை மீறும் நடவடிக்கை. இதனால் ஏப்ரல் 29ம் தேதி தேர்தலுக்கு பின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது என்றார்.
