சைக்கிளும் போச்சு… தாமரை மலருமா..? பலம் வாய்ந்த திமுக தொகுதிகளை தமாகாவுக்கு ஒதுக்கிய அதிமுக-பாஜக: தாக்குபிடிப்பாரா ஜி.கே.வாசன்

சென்னை: பலம் வாய்ந்த திமுக தொகுதிகளை அதிமுக-பாஜக இணைந்து தமாகாவுக்கு தள்ளிவிட்டுள்ளது. இது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 5ல் 3 அமைச்சர்களின் தொகுதி என்பதால் தாக்குபிடிப்பாரா ஜி.கே.வாசன் என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 28 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முக்கிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக பலம் வாய்ந்த கூட்டணியாக களம் காண்கிறது. அதிமுகவோ, பாஜக, பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்து தேர்தலை சந்திக்கிறது.

பாஜக கூடுதல் தொகுதி கேட்டு அழுத்தம் கொடுத்ததால் இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து அமித்ஷா தலைமையில் ஒரு முடிவு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னை வந்த பியூஷ் கோயல் அதிமுக அலுவலகத்தில் ஒப்பந்தத்தை மேற்கொண்டார். இதில், பாஜகவிற்கு 27 தொகுதி, பாமகவிற்கு 18 தொகுதிகள், அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதேநேரம் தமாகாவுக்கு வெறும் 2 தொகுதிகளை மட்டும் ஒதுக்க அதிமுக முன்வந்தது. இதனால், அதிருப்தி அடைந்த ஜி.கே.வாசன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை புறக்கணித்தார். அதே நேரம் தனது அதிருப்தியை பாஜ தலைமைக்கு தெரியப்படுத்தினர். இதை தொடர்ந்து பாஜ மேலிட தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, பசுமைவெளிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

தமாகாவுக்கான தொகுதிகளும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதில் ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கூட்டணி கட்சியான தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்தார். ஜி.ேக.வாசன் கேட்ட தொகுதிகளை அதிமுக- பாஜக ஒதுக்கவில்லை என்றே தமாகாவினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கிடைக்கின்ற ஒன்று, இரண்டு தொகுதிகளையாவது நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கியிருக்கலாம் என்று தமாகாவினர் கூட்டணி தலைமைக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எல்லாம் திமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிற தொகுதிகளாகும். அதுவும் 3 தொகுதிகளில் தற்போதைய அமைச்சர்கள் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களை எதிர்த்து தமாகா களம் காண்பது என்பது யோசிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒட்டன்சத்திரம் என்பது திமுகவின் கோட்டை மட்டுமில்லாமல், அது தற்போது அமைச்சராக உள்ள சக்கரபாணியின் கோட்டை என்றே கூறப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக சக்கரபாணியே அந்த தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இந்த முறையும் திமுக சார்பாக சக்கரபாணியே போட்டியிடுகிறார். அடுத்ததாக ஈரோடு மேற்கு தொகுதி கடந்த 2021ம் சட்டமன்ற தேர்தலில் மூத்த அரசியல் வாதியான முத்துசாமி போட்டியிட்டு வென்றுள்ளார். இந்த முறையும் முத்துசாமியே போட்டியிடவுள்ளார்.

அடுத்தது திமுகவின் கோட்டையாக பார்க்கப்படும் தொகுதி கும்பகோணம், இந்த தொகுதியானது கடந்த 30 ஆண்டுகளாக திமுகவே தக்க வைத்துள்ளது. எனவே திமுகவின் பலம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்றாக இருப்பது கும்பகோனம். அடுத்த தொகுதி தான் ராணிப்பேட்டை. இந்த தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று ராணிப்பேட்டை தொகுதியை தக்க வைத்துள்ளார் அமைச்சர் காந்தி, இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கும் இந்த தொகுதியில் தமாகா தாமரை சின்னத்தில் நிற்கிறது. தமாகா அடுத்ததாக களம் இறங்கும் தொகுதி கிள்ளியூர், கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று வருகிறது. இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படவுள்ளது. எனவே தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த 5 தொகுதியும் ஜி.கே.வாசனுக்கு சவாலாகவே அமைந்துள்ளது.

குறிப்பாக, ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை ஆகிய 3 தொகுதிகள் தற்போதைய திமுக அமைச்சர்கள் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்களை எதிர்த்து போட்டியிடக்கூடிய நிலையில் ஜி.கே.வாசன் தாக்குபிடிப்பாரா? என்ற கேள்வியை அரசியர் விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர்.

Related Stories: