×

மஞ்சூர் கடைவீதி, தேயிலை தோட்டங்களில் காட்டுமாடு உலா; பொதுமக்கள் அச்சம்

மஞ்சூர் : மஞ்சூர் பகுதியில் நடமாடி வரும் ஒற்றை காட்டு மாடால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வரும் இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது. சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக காட்டுமாடுகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. மேற்படி கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல வகையிலான மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் விளை நிலங்களில் காட்டுமாடுகள் கூட்டமாக புகுந்து பயிர்களை சூறையாடுவதுடன் தோட்டங்களையும் கால்களால் மிதித்து நாசம் செய்து வருகின்றன.

காட்டுமாடுகளின் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை விட்டுவிட்டனர். மஞ்சூர் பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டுமாடு ஒன்று சுற்றி வருகிறது. இந்த காட்டுமாடு கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து நடமாடி வருகிறது.

இந்த காட்டுமாடு தேயிலை தோட்டங்களில் இலை பறிக்கும் தொழிலாளர்களை கண்டால் விரட்டுவதாக கூறுகின்றனர். இதனால் தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தேயிலை ேதாட்டத்தில் இருந்து வெளியேறி இந்த காட்டுமாடு கடைவீதியில் உலா வருகிறது.

இதனால் பொதுமக்கள் நடமாட்டத்திற்கும், வாகன போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் இருவர் தேயிலை பறித்து கொண்டிருந்தனர்.

அப்போது தோட்டத்திற்குள் புகுந்த காட்டுமாட்டை கண்டு தொழிலாளர்கள் பீதி அடைந்து தேயிலை தோட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார்கள். மஞ்சூர் பகுதியில் சுற்றி வரும் காட்டுமாடை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Manjur ,Nilgiris district ,Maryland ,Mainalamattam ,Bengalmattam ,Kittatimattam ,Thenad ,Kothiben ,Samraj Estate ,Rockland ,
× RELATED பொது விடுமுறை நாளான மார்ச்.31, ஏப்.1ல்...