*கலெக்டர் தகவல்
ஊட்டி : ஊட்டி, கூடலூர் (தனி) மற்றும் குன்னூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் 736 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.இதில் 95 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்யப்பட உள்ளது. மீதமுள்ள ஐந்து சதவீதம் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி முதல் துவங்குகின்றன.தேர்தலை சுமூகமாகவும், அமைதியாகவும் நடத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி,கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் விதமாக பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி ஊட்டி,கூடலூர் (தனி) மற்றும் குன்னூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் 736 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 95 சதவீத வாக்கு சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்யப்பட உள்ளது.
மீதமுள்ள ஐந்து சதவீதம் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 3 பொது பார்வையாளர்கள், 3 செலவின பார்வையாளர்கள், ஒரு காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் வாக்குச்சாவடிகள்,பதற்றமான பகுதிகளை பார்வையிடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வெப் காஸ்டிங் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் 736 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 95 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்யப்பட உள்ளது.
நெட்வொர்க் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் 5 சதவீத வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு பாதை, குடிநீர், கழிப்பறை, இருக்கை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் தரை தளத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் 100 சதவீத அணுகல் வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
