நாகர்கோவில் மாநகர பகுதியின் குடிநீர் ஆதாரம் வேகமாக குறைந்து வரும் முக்கடல் நீர்மட்டம்

*புத்தன் அணையில் இருந்து தினமும் 4.10 கோடி லிட்டர் தண்ணீர்

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள வீடுகளுக்கு கடந்த காலத்தில் முக்கடல் அணையில் இருந்து மட்டும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. மாநகர பகுதி மக்களின் குடிநீர் தேவைகள் அதிகரிப்பால், தமிழக அரசு புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியது.

தற்போது புத்தன் அணையில் இருந்தும், முக்கடல் அணையில் இருந்தும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, குடிநீர் வீடுவீடாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

புத்தன் அணை குடிநீர் திட்டப்பணி தொடங்குவதற்கு முன்பு குடிநீர் 5 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு, தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதோடு, சில வார்டுகளில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் பாசனத்திற்காக ஜூன் 1ம் தேதி திறந்து விடப்பட்டு பிப்ரவரி 28ம் தேதி அடைக்கப்படுவது வழக்கம்.

இந்த காலகட்டத்தில் புத்தன் அணையில் இருந்து மாநகராட்சிக்கு தேவையான குடிநீர் வந்து கொண்டு இருக்கும். அணைகள் அடைக்கப்பட்டாலும் மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீருக்காக தமிழக அரசின் உத்தரவின் பேரில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, புத்தன் அணையில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முக்கடல் அணையில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது 1 அடியில் தண்ணீர் இருப்பதால், முக்கடல் அணையில் இருந்து தினமும் குறைந்த அளவே தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் புத்தன் அணைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது : நாகர்கோவில் மாநகராட்சிக்கு தினமும் 490 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் புத்தன் அணையில் இருந்து 480 லட்சம் லிட்டர் தண்ணீரும், முக்கடல் அணையில் இருந்து புத்தன் அணைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீரும் தினமும் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 15ம் தேதி அணைகள் அடைக்கப்பட்ட நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் பெருஞ்சாணி அணையில் இருந்து புத்தன் அணைக்கு வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அந்த வகையில் தினமும் 410 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு வருகிறது. இதனை தவிர முக்கடல் அணையில் இருந்து 10 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது. இப்படி எடுக்கப்படும் தண்ணீர் 36 வார்டுகளுக்கு தினமும், 16 வார்டுகளுக்கு ஒருநாள் விட்டும் க விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணையில் தற்போது 1 அடியில் தண்ணீர் கிடக்கிறது. 1 அடியின் கீழ் 20 அடி தண்ணீர் மேலும் உள்ளது. இந்த தண்ணீர் மைனஸ் 20ல் இருந்து கீழே செல்லும். தண்ணீர் குறைய குறைய அழுத்தம் குறைவாக இருக்கும்.

தற்போதுள்ள நிலையில் இன்னும் 25 நாட்கள் வரை முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கலாம். மேலும் பெருஞ்சாணி அணையில் இருந்து மே 30ம் தேதி வரை தண்ணீர் கிடைக்கும். அதனை தொடர்ந்து ஜூன் மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது, நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு தேவையான குடிநீர் கிடைக்கும். என்றனர்.

Related Stories: