சென்னை: தீவிர நடவடிக்கை மூலம் கேஸ் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வேண்டிய ஒன்றிய பாஜக அரசு பிரச்சனையை திசை திருப்புகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கொரோனா காலம்போல என பிரதமர் மோடி பேசியதால் ஏற்கனவே கேஸ் தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர்’ எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “கோவிட் காலத்தைப் போல” என பிரதமர் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது.
பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.
சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?
மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. “இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது?” என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி” என தெரிவித்துள்ளார்.
