புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில், கள்ளக்காதலி மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் சுமேர்பூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவரான முஸ்தகா குல்சன் என்கிற முன்னா, கடந்த 18ம் தேதி முதல் மாயமானார். இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
முன்னாவிற்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும், 18 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுமன் தேவி என்ற திருமணமான பெண்ணுடன் முன்னாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுமனின் கணவர் வேலைக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில், முன்னா அவருக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வந்துள்ளார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
ஒருகட்டத்தில் முன்னா அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததோடு, தன்னை வந்து சந்திக்குமாறு பிளாக்மெயில் செய்ததாகக் கூறப்படுகிறது. போலீசாரின் தொடர் விசாரணையில், முன்னாவைக் கொலை செய்ய சுமன் தனது சகோதரருடன் சேர்ந்து திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது. கடந்த 18ம் தேதி சுமன் தனது தாய் வீட்டிற்கு முன்னாவை வரவழைத்துள்ளார். அவர் வீட்டிற்குள் நுழைந்ததும், சுமனின் சகோதரர் மற்றும் கூட்டாளிகள் இரும்பு கம்பிகளால் முன்னாவை அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசியுள்ளனர்.
முன்னாவின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்த போலீசார், நேற்று முன்தினம் முன்னாவின் உடலைக் கால்வாயிலிருந்து மீட்டனர். மேலும் முன்னாவின் பைக் வேறொரு இடத்திலிருந்து கண்டறியப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘இந்தக் கொலை வழக்கில் சுமன் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரைப் பிடித்துள்ளோம். தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகிறோம். உயிரிழந்த முன்னா வரும் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்று தெரிவித்தனர்.
