×

வெண்ணந்தூர் ஒன்றியத்தில் இயந்திரத்தை பயன்படுத்தி நிலக்கடலை நடவு பணி

*விவசாயிகள் ஆர்வம்

நாமகிரிப்பேட்டை : வெண்ணந்தூர் ஒன்றியத்தில், மானாவாரி நிலங்களில் இயந்திரத்தை பயன்படுத்தி நிலக்கடலை விதை நடவு பணிகள் மேற்கொள்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில், மானாவாரி நிலங்களில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர். ஆட்கள் பற்றாக்குறையால், விவசாய பணிகளில் இயந்திர பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முன்பு ஏர் கலப்பையில் உழவு செய்த விவசாயிகள், டிராக்டர் மூலம் இரும்பு கலப்பையை இணைத்து வயலை உழுதனர். நவீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான வளர்ச்சி ஆகியவற்றால் வேளாண் தொழிலில் புதுமைகள் புகுத்தப்பட்டன. கை நடவு செய்து கொண்டிருந்த விவசாயிகள், தற்போது இயந்திரம் வாயிலாக நடவு செய்து வருகின்றனர். குறிப்பாக மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள், பெருமளவு இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

விவசாய கூலித்தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு, தீர்வாக நவீன இயந்திரங்கள் விவசாயிகளுக்கு கைகொடுக்கின்றன. நடவு பணியில் இருந்து களை பறித்தல், உரம் தெளித்தல் உட்பட அனைத்திற்கும் விவசாய தொழிலாளர்கள் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மாண்டப்பட்டியில் நிலக்கடலை சாகுபடி பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மானாவாரி பகுதியான இங்கு, விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால், மனித சக்தியை பயன்படுத்தி, எளிதாக நிலக்கடலை சாகுபடி செய்யும் இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதை பயன்படுத்தி, விவசாயியே தனது நிலத்தில் நிலக்கடலையை ஊன்றி, சாகுபடியை தொடங்கி விடலாம். விரைவாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும், கடலையை விதைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Vennandur union ,Namagiripettai ,Namakkal district ,
× RELATED கடைசி நேரத்தில் ரத்து செய்தால்...