×

போடியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.2.39 கோடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்

*வேகமெடுக்கும் கட்டுமானப் பணிகள்

*தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு

போடி : போடியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.2.39 கோடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் தமிழக அரசு பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் காமராஜர் சாலையில் பஸ் நிலையம் அருகில் சுமார் 150 ஆண்டுகள் பழைய கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.

இங்கு போடி நகரில் உள்ள 33 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள், போடியிலிருந்து தேவாரம் வரையிலும், போடி மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள போடிமெட்டு, குரங்கணி, அத்தியூத்து, அகமலை, மல்லிபட்டி, பெரியாத்து கோம்பை, வடக்குமலை கோடாங்கிபட்டி, 15 கிராம ஊராட்சிகள், மேலசொக்கநாதபுரம், மீனாட்சிபுரம், பூதிப்புரம் பேரூராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பத்திரப் பதிவுகளுக்காக போடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வர வேண்டும்.

இதற்கிடையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ளே இட நெருக்கடி இருப்பதால் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக அதிக அளவு பொதுமக்கள் தினம் தோறும் வந்து செல்கின்றனர். மேலும் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் இருந்ததால் பொதுமக்கள் சிரமமடைந்து வந்தனர்.

இதற்கிடையில் கட்டிடங்களுக்குள் பற்றாக்குறை இட வசதி இல்லாமல் நீடிப்பதால் புதிய அளவில் நவீன வசதிகளுடன் சார் பதிவாளர் புதிய அலுவலகம் கட்டப்பட வேண்டும் என பத்திர விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.2.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தர விட்டார்.

இதற்கு முன்னதாக கடந்த அதிமுக ஆட்சி நேரங்களில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் தேவை என்ற கோரிக்கை பலமுறை வலி யுறுத்தப்பட்டது. ஆனால் அதிமுக அரசு அதற்கு செவி சாய்க்காமல் கவனம் செலுத்தாமல் புதிய கட்டிடத்திற்கு வழி வகை ஏற்படுத்தாமல் அப்படியே முடக்கப்பட்டது.

இதற்கிடையில் திமுக ஆட்சியில் புதிய கட்டிடத்திற்கு அனுமதி அளித்ததன் விளைவாக சார் பதிவாளர் அலுவலகப் பகுதிகளில் தென்மேற்குப் பகுதியில் இருந்த பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. வழக்கம் போல் தற்போதுள்ள பழைய கட்டிடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது.

அதன்படி பழைய கட்டிடத்தின் தெற்கு பகுதியில் உள்ள 5330 சதுர அடியில் புதிய நவீன வசதியுடன் கட்டிடம் கட்டுவதற்கு வரைபடம் அனுமதி அளித்து தயார் செய்யப்பட்டது. அதன்படி அதை கொண்டு கடந்த 6 மாதத்திற்கு முன்பாக புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தேனி எம்.பி தங்க தமிழ்செல்வன் தலைமையில் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக புதிய நவீன கட்டுமானப் பணிகள் தீவிரமாக வேகமாக நடைபெற்று வருகிறது தற்போது 85 சதவீதம் பணிகள் நெருங்கி நடந்து வருகிறது. இதற்கிடையில் 150 ஆண்டு பழமை வாய்ந்த சார் பதிவாளர் கட்டிடத்தை தங்கதமிழ் செல்வன் அண்மையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒப்பந்ததாரர்களிடம் புதிய கட்டிட பணிகளை விரைந்தும் தரமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

150 ஆண்டுகால பழைய கட்டிட வளாகத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் வேகமெடுத்து முடிவடையும் தருவாயில் இருப்பதால் இனி வருகின்ற பத்திரப்பதிவு செய்ய வருகின்ற பொதுமக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும். இதனால் பொதுமக்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

எக்ஸ்ட்ரா தகவல்

கடந்த அதிமுக ஆட்சி நேரங்களில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் தேவை என்ற கோரிக்கை பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதிமுக அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. திமுக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி பத்திர பதிவு அலுவலகத்திற்கு வந்து செல்வர்.

Tags : Sub-Registrar's Office ,Bodi ,Tamil Nadu government ,
× RELATED பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால் உடுமலை...