×

பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால் உடுமலை சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் வருகை குறைந்தது

உடுமலை : தமிழகத்தில் தற்போது பள்ளி பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால், உடுமலை சுற்றுலா தலங்களுக்கு மக்கள் வருகை குறைந்து விட்டது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை, முதலை பண்ணை, திருமூர்த்திமலையில் திருமூர்த்தி அணை, அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் காட்சியகம், பூங்கா ஆகியவை உள்ளன.

இந்த சுற்றுலா தலங்களுக்கு தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அமராவதி அணையை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள முதலை பண்ணையை பார்வையிட்டு செல்வார்கள்.

அதேபோல, திருமூர்த்தி மலையில் அணையை பார்வையிடுவதுடன், அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபட்டு, பஞ்சலிங்க அருவியில் குளித்து செல்வார்கள். கோடையில் அங்குள்ள நீச்சல் குளத்திலும் ஏராளமான உள்ளுர் இளைஞர்கள் குளித்து மகிழ்வார்கள். மேலும், மூணாறு சாலையில் சின்னாறை தாண்டி கேரளாவில் உள்ள காந்தலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள இயற்கை காட்சிகளையும் ரசித்து செல்வார்கள்.

தற்போது, தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் வருகை முற்றிலும் குறைந்துவிட்டது.இதனால் உடுமலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள் வார நாட்களில் வெறிச்சோடி கிடக்கின்றன. திருமூர்த்திமலையிலும் சுற்றுலா பயணிகள் வருகை இல்லை.

அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு மட்டும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் மட்டும், கோடை வெப்பத்தை தணிக்கை பஞ்சலிங்க அருவிக்கு ஏராளமானோர் வந்து குளித்து செல்கின்றனர்.தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை விட்டபிறகே சுற்றுலா தலங்களுக்கு மக்கள் வருகை அதிகரிக்கும் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags : Udumalai ,Tamil Nadu ,Amaravathi Dam ,Crocodile Farm ,Tiruppur district ,Thirumoorthy Dam ,Thirumoorthi ,Amanalingeswarar Temple ,Panchalinga Waterfall ,Vanna… ,
× RELATED கலைஞர் கைவினைத் திட்டத்தில் 406 கைவினைக்கலைஞர்களுக்கு ரூ.1.66 கோடி கடன்