குன்னூர் : குன்னூர் மலைப்பாதையில் கடும் வறட்சி ஏற்பட்டு வரும் நிலையில் வன விலங்குகளுக்கு கூடுதல் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டுமென்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானை, காட்டுமாடு, சிறுத்தை, கரடி, செந்நாய் உள்ளிட்ட பெரிய விலங்குகளும், குரங்கு, மான், முயல் போன்ற சிறிய வகை விலங்குகளும் ஏராளமான அளவில் வசித்து வருகின்றன.
தற்போது நிலவி வரும் சுட்டெரிக்கும் வெயிலால், வனப்பகுதியில் உள்ள இயற்கை குளம், குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் முற்றிலும் வற்றிவிட்டன. பசுமை இழந்து காணப்படும் காடுகளில் அனல் காற்று வீசுவதால், செடி கொடிகளும் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. வனத்திற்குள் போதிய உணவும் தண்ணீரும் கிடைக்காததால், வனவிலங்குகள் பகல் நேரங்களில் புதர்களுக்குள் தஞ்சமடைகின்றன. மாலை நேரங்களில் தாகத்தைத் தணிக்க நீர்நிலைகளைத் தேடி அடர்ந்த காட்டை விட்டு வெளியே வரத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக குரங்குகளின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. பசியாலும் தாகத்தாலும் தவிக்கும் குரங்குகள், நெடுஞ்சாலைகளுக்கு வந்து வாகனங்களில் செல்வோரை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. வாகனங்களில் இருந்து வீசப்படும் உணவுகளை உண்டு பசியாறும் நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளன. இது விபத்துகளுக்கும், விலங்குகளின் உடல்நல பாதிப்பிற்கும் வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்கவும், அவற்றின் தாகத்தைத் தணிக்கவும் வனத்துறை உடனடியாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. குறிப்பாக மலைப்பாதையின் முக்கிய இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகளை அமைத்து, லாரிகள் மூலம் தொடர்ந்து தண்ணீர் நிரப்ப வேண்டும். வனப்பகுதியிலேயே விலங்குகளுக்குத் தேவையான இயற்கை உணவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சாலையில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவளிப்பதைத் தடுக்கவும், விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் கூடுதல் வனக்காவலர்களை நியமிக்க வேண்டும்.
கடும் வறட்சி நிலவும் இந்தக் காலக்கட்டத்தில், வனவிலங்குகளின் உயிரைக் காக்க வனத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வனவிலங்கு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
