*ஏழை எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்வு
ஊட்டி : கலைஞர் கைவினைத் திட்டம் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 406 கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.1 கோடியே 66 லட்சம் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அவர்கள் முன்னேற்றம் அடைய கடன் உதவி திட்டங்களையும் அறிவித்தார்.
இதனால், பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் புதிய தொழில் முனைவோராக மாறியுள்ளனர். கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள கைவினை தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு கடன் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். 25 வகையான கைவினை கலைஞர்களுக்கு அதிகாரிகள் அளிக்கும் வகையில், விரும்பிய தொழில் செய்ய உருவாக்கப்பட்ட திட்டமே கலைஞர் கைவினைத் திட்டம்.
இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கைவினை தொழிலாளர்கள் பல்வேறு கடன் உதவி திட்டங்களையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டம் மூலம் 406 கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.1 கோடியே 66 லட்சம் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தாலூகாவிற்குட்பட்ட பகுதிகளில் 80 பயனாளிகளுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.33.05 லட்சம் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டள்ளது.
கூடலூர் தாலூகாவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 155 பயனாளிகளுக்கு ரூ.59.13 லட்சம் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோத்தகிரி தாலூகாவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பயனாளிகள் 26 பேருக்கு ரூ.9 லட்த்து 39 ஆயிரத்திற்கான கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. குந்தா தாலூகாவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 54 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 88 ஆயிரம் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டது.
பந்தலூர் தாலூகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பயனாளிகள் 22 பேருக்கு ரூ.8 லட்சத்து 15 ஆயிரம் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஊட்டி தாலூகாவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 44 ஆயிரம் என மொத்தம் நீலகிரி மாவட்டத்தில் 406 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 66 லட்சத்து 3 ஆயிரம் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கைவினைக்கலைஞர்கள் பயன் அடைந்துள்ளனர்.
தொழில் மேம்படும்
கலைஞர் கைவினைத்திட்டம் மூலம் ஏழை எளிய தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் உயர தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தொழிலை மேம்படுத்த மாவட்டத்தில் 406 கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.1 கோடியே 66 லட்சம் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் தொழில் மேம்படும், வாழ்வாதாரம் உயரும் என கூறப்படுகிறது.
