×

வெளி மாநில தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு நெல்லை, ராதாபுரம் தொகுதி வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்

*எல்லைகளில் வாகன சோதனையை பார்வை

நெல்லை : நெல்லை மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தச்சநல்லூர், சங்கர்நகர், வள்ளியூர், விசுவாசபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் வெளி மாநில பொது பார்வையாளர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

நெல்லை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தச்சநல்லூர் பகுதியில் சத்திரம் புதுக்குளம் கிராம நிர்வாக அலுவலகம், தச்சநல்லூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, காமராஜர் மெட்ரிக் பள்ளி, சங்கர்நகர் கணபதிமில்ஸ் காலனியில் அமைந்துள்ள வெங்கடசாமிநாயுடு மேல்நிலைப்பள்ளி, சங்கர்நகர் புனித ஜோசப் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ஸ்ரீஜெயந்திர கோல்டன் ஜூப்ளி பள்ளி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து வெளி மாநில தேர்தல் பொது பார்வையாளர் ரிஷிகேஷ் பாஸ்கர் யசோத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருச்சிலுவை நடுநிலைப்பள்ளி, திருச்சிலுவை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, வடலிவிளை டிடிடிஏ நடுநிலைப்பள்ளி, விசுவாசபுரம் டிடிடிஏ ஆரம்பப்பள்ளி போன்ற வாக்குச்சாவடி மையங்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் அனுபா ஸ்ரீவஷ்தவா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட எல்கையான அஞ்சுகிராமம் பகுதியில் அமைக்கப்பட்ட காவல் சோதனை சாவடி மையத்தில் நடந்து வரும் வாகன சோதனை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்வில், தாசில்தார்கள் நெல்லை சந்திரஹாசன், ராதாபுரம் மாரிசெல்வம் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nellai ,Radhapuram ,Election Commission of India ,
× RELATED ஏப்ரல் 3ம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார் பிரதமர் மோடி