×

`தி.மு.கழக இளைஞர் அணிக்கு நிகராக ஆள் இல்லை’ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும்!- கரூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கரூர்: கரூரில் நடைபெற்ற, கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட – மாநகர – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுடன் ‘களத்தில் இளைஞர் அணி’ தேர்தல் பிரச்சாரம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், “இளைஞர் அணி தம்பிமார்கள் சிறப்பாக வேலை பார்த்தார்கள், தி.மு.க. இளைஞர் அணிக்கு நிகராக ஆள் இல்லை’ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும். வெற்றி என்றால், அது சாதாரண வெற்றியாக இருக்கக்கூடாது. எல்லாரும் வியந்து பேசும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
காலையில் கோயம்புத்தூரில் ஆரம்பித்து, கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகளைச் சந்தித்துவிட்டு, அதன் பிறகு ஈரோட்டுக்குச் சென்று ஈரோடு, நாமக்கல் இளைஞர் அணி நிர்வாகிகளைச் சந்தித்து, இப்பொழுது கடைசியாகக் கரூருக்கு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.
முதலில் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? எனக்கு காயம் ஏற்பட்டு ஒரு மாதம் ஆகிறது, எலும்பு முறிவு என்று தெரிவதற்கே ஒரு வாரம் ஆகிவிட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஓய்வில் இருக்கச் சொன்னார்கள். இருந்தாலும் தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதனால், மூன்று நாட்களுக்கு முன்பு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்கும்போது இன்னும் ஒரு 10 நாட்களாவது ஆகும், நீங்கள் தொடர்ந்து சுற்றுப்பயணத்திலேயே இருங்கள், வீட்டுக்குச் செல்லாதீர்கள் என்று மருத்துவர்கள் சொன்னதற்கு இணங்க இன்று மீண்டும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன்.

காலையிலிருந்து எல்லா நிர்வாகிகளும் என்னிடம் கேட்கக்கூடிய கேள்வி இதுதான். “நலமாக இருக்கிறீர்களா? உங்கள் விரல் நலமாக இருக்கிறதா? தலைவர் நலமாக இருக்கிறாரா? தலைவரைக் கேட்டதாகச் சொல்லுங்கள், உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்பதுதான் அனைவரும் சொல்வது. நீங்கள் இருக்கும்போது எனக்கோ தலைவருக்கோ எதுவுமே நடக்காது. எங்களது பலமே நீங்கள்தான். அப்படிப்பட்ட நிர்வாகிகளான உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

தனிச்சிறப்பு உண்டு;
நம் கழகத்தைப் பொறுத்தவரைக்கும் இந்த கரூருக்கு என்று தனி இடம், தனிச்சிறப்பு உண்டு. திருப்பூருக்கும் உண்டு. இந்த கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய குளித்தலை தொகுதியில்தான் நம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதன்முறையாகப் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குளித்தலை, இந்த கரூர் மாவட்டம்தான் அவரை முதல்முறை சட்டமன்றத்துக்குள் அனுப்பியது. அதன் பிறகு பார்த்தீர்கள் என்றால், அவர் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றார் என்றால், அந்த வெற்றியைத் தொடங்கி வைத்தது இந்த கரூர் மாவட்டம். அப்படிப்பட்ட கரூர் மாவட்டத்துக்கு நான் பலமுறை வந்திருக்கிறேன். ஏதோ வருடத்துக்கு ஒரு முறை வருபவன் கிடையாது. செந்தில் பாலாஜி அவர்கள் அடிக்கடி என்னை கரூர் மாவட்டத்துக்கு அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது நான் கரூருக்கு வந்திருக்கிறேன்.

தி.மு.க-வின் கோட்டை;
கடந்த மாதம்தான் நிர்வாகிகள் சந்திப்பினை நாம் கோவையில் மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பாக நடத்தினோம். அந்தச் சந்திப்பிலும் நீங்கள் அனைவரும் உங்களின் உழைப்பால் அந்தச் சந்திப்பைத் கிட்டத்தட்ட ஒரு மாநாடு போல நீங்கள் நடத்திக் காட்டினீர்கள். அதற்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று கரூர் மட்டும் தி.மு.க-வின் கோட்டை கிடையாது, இந்த மேற்கு மண்டலம் முழுவதுமே தி.மு.க-வின் கோட்டை என்று நாம் நிரூபித்துக் காட்ட வேண்டிய காலம் வந்திருக்கிறது.
ஆறு மாதங்களுக்கு முன்பு இதே கரூரில்தான் நம் முப்பெரும் விழா நிகழ்ச்சியை, செந்தில் பாலாஜி அவர்கள் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார். அந்த நிகழ்ச்சிக்கு உங்களில் பல பேர் நிச்சயமாக வந்திருப்பீர்கள். அன்று அந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கொட்டும் மழையில் நம் தலைவர் பேசினார். அப்பொழுது மூன்று விஷயத்தைத் தலைவர் உரக்கச் சொன்னார், அதனை முழக்கமாகச் சொன்னார்.

தமிழ்நாட்டை நான் தலைகுனிய விடமாட்டேன். தமிழ்நாடு போராடும், நிச்சயம் தமிழ்நாடு வெல்லும் என்று அன்று கரூரில் முப்பெரும் விழாவில் நம் தலைவர் அன்று சொன்னார்கள். தலைவர் அன்று சொல்லச் சொல்ல நாமெல்லாம் திரும்பச் சொன்னோம். அந்த உறுதிமொழியை நாம் அன்று எடுத்தோம். அந்த உறுதிமொழியை நிறைவேற்றிக் காட்டவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இப்பொழுது இன்று இருக்கிறோம்.

தனி உற்சாகம் ஏற்படும்;
மிக மிக முக்கியமான தருணத்தில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்கள். இன்னும் 32 நாட்கள்தான் இருக்கின்றன. 23-ஆம் தேதி தேர்தல். நான் அடிக்கடி சொல்வதுண்டு, எப்பொழுதெல்லாம் உங்களைச் சந்திக்கிறேனோ, பல்வேறு நிகழ்ச்சிகளில் சந்திக்கிறேனோ, எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும், இந்த இளைஞர் அணி நிர்வாகிகளைச் சந்திக்கும்போது எனக்குத் தனி உற்சாகம் ஏற்பட்டுவிடும். என் குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு என் உறவினர்கள், சகோதரர்களைச் சந்திக்கிற மாதிரி ஓர் உணர்வு எனக்கு ஏற்படும். அந்த உணர்வுடன்தான் நான் இன்று வந்திருக்கிறேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது `களத்தில் இளைஞர் அணி’ என்கின்ற முன்னெடுப்பை ஆரம்பித்து நீங்கள் அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்கள். வாக்காளர்களைச் சந்தித்தீர்கள். உங்களின் அந்தப் பிரச்சாரத்தால்தான் நாம் 100 சதவிகித வெற்றியை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெற்றோம். இன்று மீண்டும் அந்த முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். களத்தில் இளைஞர் அணி என்று களத்துக்கு இளைஞர் அணி நிர்வாகிகள் நாம் செல்ல வேண்டும். மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் அந்த 100 சதவிகித வெற்றியை நாம் பெற்றாக வேண்டும்.

இந்தியாவில் இருக்கக்கூடிய பல கட்சிகள் இன்று வாக்குச்சாவடி குழு அமைப்பதற்குத் திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று இளைஞர் அணிக்குப் பார்த்தீர்கள் என்றால் வாக்குச்சாவடிக்கு ஒரு நிர்வாகியை நாம் நியமித்திருக்கிறோம். எல்லா இயக்கத்திலும் இதெல்லாம் சாத்தியம் கிடையாது. தி.மு.க இளைஞர் அணியில் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியம். இவ்வளவு பெரிய ஓர் இளைஞர் படையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றால் தேர்தல் என்கின்ற அந்தப் போருக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தப் படையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.

முதன்மையான அணி;
தி.மு.க-வில் 25 அணிகள் இருக்கின்றன. ஆனால், கலைஞர் எப்பொழுதும் சொல்வார், எத்தனையோ அணிகள் இருந்தாலும் இளைஞர் அணிதான் முதல் அணி, முதன்மையான அணி என்பார். தலைமை என்ன சொன்னாலும், தலைவர் என்ன சொன்னாலும் அதை, களத்தில் முதலில் இறங்கிச் செயல்படுத்திச் செய்து முடிப்பது இளைஞர் அணியாகத்தான் இருக்கும். இப்பொழுது மீண்டும் நாம் அதை நிரூபிக்க வேண்டும். தலைவர் அவர்கள் அந்த அளவுக்கு இளைஞர் அணி மேல் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார். அந்த வார்த்தையை நாம் காப்பாற்ற வேண்டும்.

இளைஞர் அணியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு சிறந்த பயிற்சிக் களம். எடுத்த உடனே எல்லாரையும் முதன்மைப் போட்டியில் விளையாட விட்டுவிட மாட்டார்கள். விளையாடத் தெரிந்தாலும் சரி, விளையாடத் தெரிகிறதா, எந்த நேரத்தில் எப்படி விளையாடுகிறான் என்பதைச் சரிபார்ப்பதற்குத்தான் `வலைப் பயிற்சி’ கொடுப்போம் என்று சொல்வார்கள். எனவே நமக்கு மிகப்பெரிய பொறுப்புகள் வருவதற்கான ஒரு பயிற்சிக் களம்தான் இந்த இளைஞர் அணி பொறுப்பு. இங்கே நீங்கள் எடுக்கக்கூடிய பயிற்சிதான் நாளைக்கு உங்களை மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தப்போகிறது.

நாம் கடந்த ஐந்து வருடங்களாகப் பல்வேறு பணிகள் செய்திருக்கிறோம். இளைஞர் அணி சார்பாகவே பல்வேறு பணிகள் செய்திருக்கிறோம். கடுமையாக உழைத்திருக்கிறோம். மக்களுடன் சேர்ந்து இருக்கிறோம். மக்களுடன் தொடர்பில் வைத்திருக்கிறோம். இப்பொழுது கடைசி நேரத்தில் இன்னும் அதிகமாக, இறுதி உந்துதல் என்று சொல்வார்கள். கடைசி நேரத்தில் இந்தக் கூடுதல் முயற்சியை நாம் நிச்சயம் செய்ய வேண்டும். அதுதான் இந்த அடுத்த 30 நாட்கள். இந்த 30 நாட்களும் மக்களைச் சந்திப்பதற்குத் தயாராகிவிட்டோம்.

திராவிட மாடல் அரசு சாதனை;
எந்தத் தைரியத்தில் தயாராகியிருக்கிறோம்? ஐந்து வருடங்களாக நம் திராவிட மாடல் அரசு, நம் தலைவர் முதலமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களை மக்களுக்குச் செய்து கொடுத்திருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் நாம் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் செய்து காட்டியிருக்கிறோம் என்கின்ற அந்தத் தைரியத்தில் மக்களைச் சந்திக்கிறோம். இன்று இந்தியாவிலேயே மக்களை தினமும் சந்திக்கின்ற, நேரடியாகச் சந்திக்கின்ற ஒரே முதலமைச்சர் நம் தலைவர் அவர்கள்தான். எந்தத் தைரியத்தில் சந்திக்கிறார்? மக்களுக்குச் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றியிருக்கிறோம் என்கிற தைரியத்தில் சந்திக்கிறார்.

சில திட்டங்களை மட்டும் இங்கே நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நம் தலைவர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கு விடியல் பயணத் திட்டம். 920 கோடி பயணங்கள் மகளிர் மேற்கொண்டிருக்கிறார்கள். ஐந்து வருடத்தில், ஒவ்வொரு மகளிரும் ஒவ்வொரு மாதமும் 900 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் மட்டும் சேமித்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இன்று பல்வேறு மாநிலங்கள் இந்த விடியல் பயணத் திட்டத்தைப் பெயர் மாற்றி அவர்களின் மாநிலங்களில் செயல்படுத்தியிருக்கிறார்கள்.

21 லட்சம் குழந்தைகள்;
முதலமைச்சர் காலை உணவுத் திட்டம். ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான காலை உணவு, அதன் பிறகு தரமான கல்வி வழங்கப்படுகிறது. 21 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். அரசுப்பள்ளியில் படித்து எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும் மாணவனாக இருந்தால் தமிழ்ப்புதல்வன் திட்டம், மாணவியாக இருந்தால் புதுமைப்பெண் திட்டம் மூலமாக மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 13 லட்சம் மாணவ மாணவிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றிருக்கிறார்கள்.

உயர்கல்வி சேர்க்கை விகிதம் என்பார்கள். பள்ளியில் படித்துவிட்டு எத்தனை பேர், உயர்கல்வியில் படிப்பதற்காகச் சேர்கிறார்கள் என்பதுதான் இந்த உயர்கல்விச் சேர்க்கை விகிதம். இந்தியாவின் மொத்தச் சேர்க்கை விகிதம் 26 சதவிகிதம். தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் 50 சதவிகிதம். இந்தியாவின் ஜி.இ.ஆர்)-ஐ விட இரண்டு மடங்கு தமிழ்நாட்டின் ஜி.இ.ஆர் நிணிஸி அதிகம். அதற்குக் காரணம் இப்படிப்பட்ட திட்டங்கள் – முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகியவைதான்.

10 லட்சம் மடிக்கணினிகள்;
தலைவர் அறிவித்து ஒரே மாதத்தில் 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை அறிவித்துக் கொடுத்து முடித்துவிட்டோம். மடிக்கணினி என்றால் அ.தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்ட மடிக்கணினிகள் மாதிரி கிடையாது. அதைச் சில பேர் உண்மையை மறைக்கிறார்கள். என்ன தெரியுமா சொல்கிறார்கள்? “அ.தி.மு.க ஆட்சியில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், அதை நீங்கள் நிறுத்திவிட்டீர்கள்’’ என்று. கிடையாது, அ.தி.மு.க ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 2019- ஆம் ஆண்டிலேயே அ.தி.மு.க ஆட்சியில் அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள்.

ஆனால் நம் தலைவர் “கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி இன்னும் பயனுள்ளதாக இருக்கும், அதுவும் படித்து முடித்துவிட்டு அவர்கள் வேலைக்குச் செல்லும்போது அவர்களின் வேலைக்கும் அது இன்னும் பயனாக இருக்கும்’’ என்று சொல்லி இப்பொழுது இறுதி ஆண்டு படிக்கக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும் கொடுத்து முடித்தாகிவிட்டது. 10 லட்சம் மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டோம். நவீனத் தொழில்நுட்பத்துடன் கொடுத்திருக்கிறோம், செயற்கை நுண்ணறிவு மென்பொருளோடு கொடுத்திருக்கிறோம். ஆறு மாதத்துக்கு இலவசமாகக் கொடுத்திருக்கிறோம். இன்று அதை வாங்கிய மாணவர்கள் எல்லாம் நம் முதலமைச்சரைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

`தாயுமானவர்’ திட்டம்;
`தாயுமானவர்’ திட்டம். இந்தியாவிலேயே எங்கேயுமே இந்தத் திட்டம் இல்லை. பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும், அவர்களின் கல்வி நிதிக்காக மாதம் 2,000 ரூபாய், 12-ஆம் வகுப்பு படிக்கிற வரைக்கும் அவர்களுக்கு மாதந்தோறும் நம் முதலமைச்சர், நம் அரசு கொடுக்கிறது. இவையெல்லாம் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டங்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 கடந்த மூன்று வருடமாக நம் தலைவர் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 36,000 கொடுத்திருக்கிறார்கள். மகளிர் மத்தியில் இந்த திட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு. எப்படியாவது சட்டமன்றத் தேர்தலைக் காரணங்காட்டி அந்தத் திட்டத்தை நிறுத்திவிட வேண்டும் என்று சங்கிக் கூட்டம் முயற்சி செய்தது. சில மாநிலங்களில் நீதிமன்றத்துக்குச் சென்று நிறுத்தியிருக்கிறார்கள். அந்தச் செய்தி நம் தலைவருக்கு வந்தது. தலைவர் என்ன செய்தார்? “நான் 1,000 கொடுப்பதைத் நீ நிறுத்துகிறாய், நான் 5,000 கொடுக்கிறேன் எப்படி நிறுத்துகிறாய் என்று பார்த்துவிடுவோம்’’ என்று சொல்லி, கடந்த மாதம் நம் தலைவர் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மூன்று மாதம் சேர்த்து 3,000, கோடைக்கால சிறப்பு நிதி 2,000 என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5,000 ஒரே தவணையில் நம் தலைவர் கொடுத்துவிட்டார்.

பிப்ரவரி மாதம் மகளிருக்கு எல்லாம் பெரும் ஆச்சரியம் அடைந்தார்கள். “திடீரென்று யார் 5,000 கொடுத்தது நம் வங்கி கணக்கிற்கு?” என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். 7 மணிக்குத் தலைவர் பணம் போட்டார், 9 மணிக்கு எல்லாரும் வங்கிக்குச் சென்று பணத்தை எடுத்துவிட்டார்கள். ஏன்? மோடி எடுத்துவிடுவாரோ என்கின்ற பயம். வங்கியில் இருந்து ஏதாவது காரணம் சொல்லி குறைந்தபட்ச இருப்பு என்று சொல்லி ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அதையும் மோடி பிடுங்கிவிடுவாரோ என்று நம் மகளிர் சென்று அந்த 5,000-த்தையும் எடுத்துவிட்டார்கள். இன்று தலைவர் 5,000 கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இன்னொரு வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். “மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடனே அந்த 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்திக் கொடுப்பேன்’’ என்கின்ற வாக்குறுதியும் நம் தலைவர் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2 பேருக்கு மட்டும்தான் அரசு வேலை வழங்கினார்கள். ஆனால் நாம் கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் நம் முதலமைச்சர் எனக்கு ஆணையிட்டதனால், இரண்டு வருடத்தில் 300 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். இப்படிச் குழந்தைகளிலிருந்து முதியவர்கள் வரைக்கும் ஒவ்வொருவருக்கும் நம் அரசு திட்டங்களைப் பார்த்துப் பார்த்துச் செய்து கொண்டிருக்கிறது.

கரூர் திட்டங்கள்;
இன்று கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலும் பல வளர்ச்சித் திட்டங்களை நம் அரசு செய்திருக்கிறது. சில திட்டங்களை மட்டும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை மேம்பாட்டுப் பணிகள் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. கரூருக்குப் புதிய பேருந்து நிலையம் 40 கோடி ரூபாய் செலவில் நம் அரசு கட்டிக் கொடுத்திருக்கிறது.

கே.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சிக்கு 370 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் நம் அரசு செய்து கொடுத்திருக்கிறது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரூர் மாவட்டம் நெரூருக்கும் திருச்சி மாவட்டம் உன்னியூருக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சிதம்பரம் மற்றும் கரூர் இடையே நான்கு வழிச் சாலையை 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்துகின்ற பணியை இப்பொழுது நடத்தி முடித்திருக்கிறோம்.

திருப்பூர் திட்டங்கள்;
திருப்பூர் மாநகராட்சிக்கு 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வழங்கல் திட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. காங்கேயம் அரசு மருத்துவமனை40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. திருப்பூரில் மினி டைடல் பூங்கா. திருப்பூரிலும் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. பல்லடம், தாராபுரம் நான்கு வழிச்சாலை அகலப்படுத்தப்படும் பணிகள்.
சுமார் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நொய்யலாறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படி கரூர், திருப்பூர் மாவட்டத்துக்கு மட்டும் இல்லை, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்தையும் பார்த்துப் பார்த்து நம் முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களைக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் இன்று இந்தியாவிலேயே வளருகின்ற மாநிலங்களில் முதல் மாநிலமாக 11.19% வளர்ச்சியோடு, முதல் முறை இரட்டை இலக்க வளர்ச்சியோடு இன்று தமிழ்நாடு முதல் மாநிலமாக இடம் பிடித்திருக்கிறது. நம் மாநிலம் இவ்வளவு சாதனைகளைச் செய்து, இவ்வளவு சாதித்து வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு, பா.ஜ.க அரசு எந்த விதத்திலாவது நமக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்களா? நிதி கொடுத்திருக்கிறார்களா? நம் உரிமைகள் எல்லாம் பறித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கல்வி உரிமை, நிதி உரிமையைப் பறிக்கிறார்கள், நாம் கேட்கும் நிதியைக் கொடுப்பது கிடையாது. தமிழ்நாட்டுக்கு என்று எந்தப் புதுத் திட்டங்களையும் தருவதில்லை. மோடி அவர்களும் அமித்ஷா அவர்களும் நல்லதுதான் செய்யவில்லை, கெடுதலாவது செய்யாமல் இருக்கலாம். எந்த விதமான திட்டமும் தமிழ்நாட்டிற்குத் தருவதில்லை. அதனால்தான் பாசிச பா.ஜ.க-வை துணிச்சலோடு எதிர்த்து நிற்கிறார் நம் தலைவர்.

இன்று நான்கு அடிமைக் கட்சிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் புகுந்துவிடலாம் என்று பா.ஜ.க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் நான் உறுதியாகச் சொல்கிறேன் பாசிச சக்திகளின் அரசியல் விளையாட்டுகள் வட மாநிலங்களில் செயல்படும், ஆனால் தமிழ்நாட்டுக்குள் என்றும் அவர்களின் அரசியல் விளையாட்டுகள் என்றும் எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் என்றும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் சூழ்ச்சி வேலை தமிழ்நாட்டில் என்றும் எடுபடாது. அதனால்தான் நம் தலைவர் அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறார் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டு அணிக்கும் டெல்லி அணிக்குமான தேர்தல்.

மோடியின் முரட்டு அடிமை;
இந்தத் தேர்தலில் நாம் ஒரு முடிவுகட்ட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் இன்று ஒரு முடிவு கட்டிவிட்டார்கள். 10 தோல்வி பழனிச்சாமியைப் படுதோல்வி பழனிச்சாமியாக நாம் மாற்றிக் காட்ட வேண்டும். இந்த முறையும் அமித்ஷா, மோடி அவர்களின் அடிமைக் கூட்டணியை நாம் தமிழ்நாட்டுக்குள் நுழைய விடக்கூடாது.
அரசியலில் முரட்டுத் தொண்டர்களைப் பார்த்திருப்பீர்கள், முரட்டுப் பக்தர்களைக் கூடப் பார்த்திருப்பீர்கள், ஆனால் எங்காவது முரட்டு அடிமையைப் பார்த்திருக்கிறீர்களா? எடப்பாடி பழனிசாமி ரூபத்தில் இன்று ஒரு முரட்டு அடிமையாக இன்று மோடியின் முரட்டு அடிமையாக அவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு பழமொழி சொல்வார்கள் ஜாடிக்கு ஏற்ற மூடி கிடைத்துவிட்டது என்று சொல்வார்கள். இன்று மோடிக்கு ஏற்ற ஓர் அடிமைதான் இந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

எப்பொழுதுமே ஓர் அசல் தரமான பொருளை உருவாக்கிவிட்டார்கள் என்றால், அறிமுகப்படுத்திவிட்டார்கள் என்றால், அந்தப் பொருள் நன்றாக இருக்கும், அப்பொழுது நல்ல வரவேற்பு கிடைக்கும், பொதுமக்கள் அனைவரும் அதைப்பற்றிப் பேசுவார்கள், அதை வாங்கிப் பயன்படுத்துவார்கள். உடனே ஒரு மோசடிக் கும்பல் இருக்கும் அதிலிருந்து எப்படியாவது பணம் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள் என்ன செய்வார்கள்? அதே மாதிரி ஒரு போலித் தயாரிப்பை செய்து சந்தையில் உலவ விடுவார்கள். அதை எல்லாரும் என்ன தெரியுமா சொல்வார்கள்? அசெம்பிள்டு பீஸ், சைனா மேக் என்று சொல்வார்கள். அந்த வகையில் இன்று ஓர்அசெம்பிள்டு பீசாக, சைனா மேக் மாதிரி டெல்லி மேக்காக இருப்பதுதான், இன்று இருக்கிற அ.தி.மு.க கூட்டணி. அவர்கள்தான் இந்தக் கூட்டணியை இன்று இணைத்திருக்கிறார்கள். அந்த கூட்டணியில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரைப் பற்றியும் கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள்.

ஒருவர் என்ன சொன்னார்? எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கவுன்சிலர் ஆவதற்கு கூடத் தகுதி கிடையாது என்று சொன்னவர் தான் இன்று அவர்கள் கூட்டணியில் ஒருவர் இருக்கிறார். ஒருவர் அப்படிச் சொன்னார், இன்று அந்தக் கூட்டணியில் இருக்கக்கூடிய ஒருவர், இரண்டு மாதங்களுக்கு முன் என்ன தெரியுமா சொன்னார்? எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி செல்வதற்கு நான் தூக்கில் தொங்கி இறந்துவிடுவேன் என்று ஒருவர் சொன்னார். இன்று இவர்கள்தான் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது, நினைவுபடுத்த வேண்டியது நம் கடமை.

தலைவர்தான் சாம்பியன்;
இன்று பா.ஜ.க ஒரு அணி, பா.ஜ.க-வின் பி-அணி, சி-அணி, டி-அணி என்று பல அணிகள் இன்று இறங்கியிருக்கின்றன. எத்தனை அணிகள் வந்தாலும் தி.மு.க தான் சாம்பியன், நம் தலைவர்தான் சாம்பியன் என்கிறதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். முதலில் இளைஞர் அணி நிர்வாகிகள், உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். முதலில் உங்களின் வாக்கு, உங்களின் குடும்பத்தினரின் வாக்கு அதை முதலில் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். உங்களின் பெற்றோர்கள், உங்களின் அண்ணன், தங்கை, தம்பிமார்கள், உங்களின் மனைவி அவர்களின் வாக்குகள் எதுவுமே சிந்தாமல் சிதறாமல் நம் தி.மு.க-வுக்கு உதயசூரியன் சின்னத்துக்கு அதை நீங்கள் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

உங்களின் நண்பர்கள், நண்பர்களின் உற்றார் உறவினர்கள், தம்பி தங்கைகள் அவர்களிடமும் நம் பிரச்சாரத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும். கழக ஆட்சியில் செய்திருக்கக்கூடிய சாதனைகளை எடுத்துக் கொண்டு சேருங்கள். சில பேர் மாற்றுக் கட்சியினராக கூட இருக்கலாம், எதிர்க்கட்சியாக இருக்கலாம். நம் திட்டங்கள் தெரியாமல் நம் வரலாறு தெரியாமல் அவர்கள் எல்லாம் மாற்றுக் கட்சியில் சேர்ந்து இருக்கலாம். அவர்களையும் சந்தித்துப் பேசுங்கள். தி.மு.க தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்திருக்கிறது, மாநில உரிமைகளுக்கு நாம் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

இன்று கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது அந்த கூட்டத்திடமும் பொறுமையாக உட்கார்ந்து பேசுங்கள். அவர்களையும் கொள்கைவயப்படுத்துகின்ற கடமை நமக்கு இருக்கிறது. நமக்கு எதிராகப் பரப்பப்படுகின்ற பொய் செய்திகளை, வதந்திகளை ஆதாரத்தோடு நீங்கள் களத்தில் இறங்கி முறியடியுங்கள்.

புள்ளி விவரத்துடன் சொல்லுங்கள்;
முக்கியமாக கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு எவற்றையெல்லாம் இழந்தது என்பதையும், கடந்த ஐந்து வருடத்தில் நம் முதலமைச்சர், நம் தி.மு.க ஆட்சியில் அதையெல்லாம் எப்படிச் சரி செய்தோம் என்பதைத் தரவுத் தளத்தோடு அவர்களை சந்தித்துப் பேசுங்கள். புள்ளி விவரங்களோடு எடுத்துச் சொல்லுங்கள்.

வட்ட, கிளை, பகுதி இளைஞர் அணி நிர்வாகிகள் வாக்குச்சாவடியில் இருக்கிற ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது இரண்டு முறையாவது நீங்கள் சென்று வாக்கு கேட்க வேண்டும். இளைஞர் அணியின் இலக்கு, ஒவ்வொரு வீட்டிலும் 18 வயதிலிருந்து 35 வயது வரைக்கும் இருக்கக்கூடிய அனைத்து வாக்காளர்களும் நம் இலக்கு என்று முடிவு செய்து நாம் வேலை செய்ய வேண்டும். நான் எப்படி உங்களையெல்லாம் பலமுறை சந்திக்கிறேனோ, பலதடவை சந்திக்கிறேனோ அதே மாதிரி நீங்களும் வட்ட மற்றும் வாக்குச்சாவடி அளவில் இருக்கிற இளைஞர் அணி நிர்வாகிகளை நீங்களும் சந்தித்து அவர்களை ஊக்குவியுங்கள்.

இளைஞர் அணி நிர்வாகிகள் நீங்கள் பலர் பி.எல்.ஏ.-2, பி.எல்.சி-களாக இருக்கிறீர்கள். அந்தந்தப் பொறுப்பில் மிகவும் கவனமாக நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். உங்கள் வாக்குச்சாவடியில் உங்கள் தொகுதியில் இளைஞர் அணி நிர்வாகிகளின் பணி தனியாகத் தெரிய வேண்டும். களத்தில் மட்டும் இல்லாமல் அந்தப் பணி தேர்தல் முடிவிலும் தனியாகத் தெரிய வேண்டும்.

நான் உங்களிடம் எல்லாம் கேட்டுக்கொள்வது மக்களுடன் நீங்கள் அனைவரும் நேரடித் தொடர்பில் இருங்கள். நீங்கள் நேரடித் தொடர்பில் மக்களுடன் இருந்தீர்கள் என்றால் நிச்சயம் அவர்கள் நம்பிக்கையை நீங்கள் பெற்றுவிடுவீர்கள். மக்களின் நம்பிக்கையை ஒரு முறை நீங்கள் பெற்றுவிட்டீர்கள் என்றால் அது உங்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய ஒரு ஆதரவாக இருக்கும்.

பொதுவாழ்விற்கு என்று வந்துவிட்டோம் என்றால் மக்களின் நம்பிக்கைதான் மிக மிக முக்கியம். அதனால் மக்களிடம் பேசும்போது கவனமாகப் பேசுங்கள். இன்று எல்லார் கையிலும் அலைபேசி இருக்கிறது எல்லாவற்றையும் எல்லாரும் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க நிர்வாகி அதுவும் குறிப்பாக இளைஞர் அணி நிர்வாகிகள் யாராவது தவறாகப் பேசிவிட மாட்டார்களா தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட மாட்டார்களா அதைச் செய்தியாக்கி பெரிய விஷயம் ஆக்கிவிட மாட்டோமா என்று செய்தித் தொலைக்காட்சிகள் எல்லாம் காத்துக் கொண்டிருக்கின்றன. எனவே நம் ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்துப் பார்த்துப் பேச வேண்டும்.

ஆரோக்கியமான போட்டி;
யாருடைய வாக்குச்சாவடியில் யார் அதிக வாக்கு வாங்கித் தரப்போகிறீர்கள் என்று உங்களுக்குள் ஓர் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். நான் இந்தத் தெருவுக்குப் பொறுப்பு, நான் இந்த குடும்பங்களுக்கு நான் பொறுப்பு, இந்த 100 வாக்குகளுக்கு நான் பொறுப்பு என்று உங்களுக்குள் திட்டமிட்டு, உத்தியோடு, கவனமாகச் செய்தீர்கள் என்றால் நுண் அளவில் இறங்கிப் பணி செய்தோம் என்றால் நிச்சயம் வெற்றி உறுதி.
உதாரணமாக ஒரு வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த 1,000 வாக்காளர்களையும் நாம் நிச்சயம் ஒரு முறையாவது நம் இளைஞர் அணி நிர்வாகிகள் சந்தித்திருக்க வேண்டும். அதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தப் பணிகளை எல்லாம் செய்யும்போது ஒன்றிய, நகர, மாவட்டச் செயலாளர்கள் அவர்களுடன் ஆலோசனை செய்து அவர்களின் வழிகாட்டலுடன் செய்யுங்கள். அவர்கள் உங்களைக் கண்டிப்பாக வழிநடத்துவார்கள். தேர்தலுக்கு இன்னும் 32 நாட்கள்தான் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் நீங்கள் எத்தனை பேரைச் சந்தித்தீர்கள் எந்தப் பகுதியில் வாக்கு சேகரித்தீர்கள் என்பதைக் குறிப்பேட்டில் குறித்து, தேதி போட்டுப் புகைப் படத்தோடு
பதிவு செய்து வையுங்கள்.

நான் மீண்டும் பிரச்சாரத்திற்காக கரூருக்கும் திருப்பூருக்கும் நிச்சயம் வருவேன். அப்பொழுது வரும்போது நிச்சயமாக உங்களின் குறிப்பேட்டைப் பார்த்துச் சரிபார்ப்பேன். நீங்கள் ஒவ்வொருவரும் நான் இத்தனை வாக்குகளை நான் உறுதி செய்து வைத்திருக்கிறேன், இத்தனை வாக்குகளை நான் வந்து சேமித்து வைத்திருக்கிறேன், இத்தனை பேரை தி.மு.க ஆதரவாளர்களாக மாற்றி வைத்திருக்கிறேன் என்று நீங்கள் சந்தோஷமாகச் சொல்லும்போதுதான் எனக்கு உண்மையாகவே அன்று சந்தோஷம்.

நீங்கள் ஒவ்வொருவரும் செல்வாக்கு செலுத்துபவர்களாக மாற வேண்டும். நான் மீண்டும் உங்களுக்குச் சொல்கிறேன் யார் உண்மையாக உழைக்கிறீர்களோ நிச்சயம் அவர்களுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மறுபடியும் சொல்கிறேன், உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்துக்கு நான் பொறுப்பு. நான் மட்டும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்காதீர்கள் நம் தலைவர் அவர்களும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். தலைவர் உங்களை மட்டும் இல்லை என்னையும் சேர்த்து கவனித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் என்னென்ன பணிகள் செய்து கொண்டிருக்கிறோம் என்று கவனித்துக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மட்டும் வைக்கப்பட்ட தேர்வு கிடையாது, உங்களுக்கும் சேர்த்து தான். நாம் இரண்டு பேரும் சேர்ந்துதான் அந்தத் தேர்வை எழுதப்போகிறோம்.

நிச்சயமாக தேர்ச்சி பெறுவோம். ஆனால் சாதாரணமாகத் தேர்ச்சி பெற்றால் நமக்கு அழகா? சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றுக் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் இளைஞர் அணிக்குப் பெருமை. அதை நீங்கள் செய்வீர்கள் என்கின்ற என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தி.மு.க காரன் என்றால் எல்லாரும், எதிர்க்கட்சிக்காரன் கூட என்ன தெரியுமா சொல்வான்? ‘தேர்தல் வேலை என்று வந்துவிட்டால் தி.மு.க காரன் சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு அசராமல் வேலை பார்க்கிறான்ப்பா,’ என்று எதிர்க்கட்சிகள் சொல்வார்கள். அவர்களை நாம் பேச வைக்க வேண்டும். என்ன சொல்ல வைக்க வேண்டும்? ‘சிங்கிள் தகவல் தலைமையிடமிருந்து வந்தால் போதும், 234 தொகுதியிலும் இளைஞர் அணி தம்பிமார்கள் வாக்குச்சாவடி வரைக்கும் இறங்கி வேலை பார்த்தார்கள்’ என்று அவர்களைச் சொல்ல வைக்க வேண்டும்.

என்றுமே தலைகுனியாது;
தமிழ்நாடு என்றுமே தலைகுனியாது என்பதை நம் தலைவர் திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்றால், அதை நாம் களத்தில் செய்து காட்ட வேண்டும். தலைவர் சொல்கிறார், ‘தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.’ அதை பலமுறை தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். அதை மீண்டும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

தலைவர் நமக்கு இலக்கு கொடுத்திருக்கிறார். ‘வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு’ என்று. ஆனால் நான் சொல்கிறேன், அடுத்த 32 நாட்கள் களத்தில் இறங்கிச் சரியாக வேலை செய்தோம் என்றால், பிரச்சாரத்தைச் சரியாக மேற்கொண்டோம் என்றால், 200 அல்ல, 234 தொகுதியிலும் நிச்சயம் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்.

அந்த வெற்றியைத் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் இருந்து நாம் தொடங்க வேண்டும். கரூர் மாவட்டம் ஏற்கனவே 100 சதவிகித வெற்றி பெற்றிருக்கோம். இருந்தாலும் இந்த முறை மெத்தனமாக இருந்துவிடக்கூடாது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சென்ற முறை வாங்கிய வாக்கு வித்தியாசத்தை விட அதிகமான வாக்கு வித்தியாசத்துக்கு நாம் இலக்கு வைக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தாராபுரம், காங்கேயம், திருப்பூர் தெற்கு தொகுதிகளிலும், சென்ற முறை தவறவிட்ட பல்லடம், அவினாசி, திருப்பூர் வடக்கு, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதியை நாம் இந்த முறை தவறவிட்டுவிடக் கூடாது. மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் ஆட்சி அமைக்கப் போவது உறுதி. தி.மு.க ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கப் போவது உறுதி. நம் தலைவர் உறுதியாக இரண்டாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பில் அமரப் போவது உறுதி. அந்த வெற்றிக்கு இளைஞர் அணியின் பங்களிப்பு மிக மிக முக்கியம் என்று எல்லாரையும் பேச வைக்க வேண்டும். ‘இளைஞர் அணி தம்பிமார்கள் சிறப்பாக வேலை பார்த்தார்கள், தி.மு.க இளைஞர் அணிக்கு நிகராக ஆள் இல்லை’ என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும். வெற்றி என்றால் அது சாதாரண வெற்றியாக இருக்கக்கூடாது. எல்லாரும் வியந்து பேசும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்க வேண்டும். அடுத்த 32 நாட்களுக்குத் தேர்தல் மட்டும்தான் நம் கண்களுக்குத் தெரிய வேண்டும். ஆகவே இதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் பணிகளைச் செய்யுங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம், தேர்தல் நெருங்க நெருங்க நிறையத் தேர்தல் கருத்துக்கணிப்பு எல்லாம் வரும். அதுவும் இந்தக் கருத்துக்கணிப்பு எல்லாம் பார்த்தீர்கள் என்றால், இப்பொழுது எல்லாக் கருத்துக்கணிப்பிலும் தி.மு.க தான் வெற்றி, தி.மு.க.தான் அடுத்த ஆட்சி அமைக்கப் போகிறது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் தன்னம்பிக்கையோடு இருக்கலாம், ஆனால் அதிகப்படியான தன்னம்பிக்கையில் இருக்கக்கூடாது.

கருத்துக்கணிப்பில் என்ன சொல்கிறார்களோ அதை இரண்டு மடங்காக மாற்றிக் காட்ட வேண்டும். அதுதான் தி.மு.க. இளைஞர் அணியின் வெற்றி. நம்மை அழித்துவிடுவோம், நம்மை ஒழித்துவிடுவோம் என்று இன்று புதிது புதிதாகக் கிளம்பி வருவார்கள். ஏற்கனவே இருப்பவர்கள் எல்லாம் சொல்வார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டாம்.

அவர்களுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா 1940-களில் சொல்லிவிட்டார். என்ன தெரியுமா சொல்லியிருக்கிறார்? ‘தி.மு.க-வை அழிக்க வேண்டும் என்று பல பேர் கிளம்பி வருவார்கள். தி.மு.க-வை அழிக்க வேண்டும் என்று நான்கு அடிக்குக் குழி வெட்டுவார்கள். அவர்கள் குழி வெட்டிக்கொண்டிருக்கும் போதே தி.மு.க ஆறு அடிக்கு வளர்ந்துவிடும். உடனே அவர்கள் ஆறு அடிக்குக் குழி வெட்ட இறங்குவார்கள், அதற்குள் தி.மு.க 12 அடிக்கு வளர்ந்துவிடும். நீங்கள் வெட்ட வெட்ட நாங்கள் வளர்ந்துகொண்டே இருப்போம். உங்களால் எந்த நாளிலும் தி.மு.க-வை நெருங்க முடியாது, வீழ்த்த முடியாது’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றே சொல்லிவிட்டார்.

எனவே, அதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் நாம் ஈடுபடுவோம் என்று கூறிக்கொண்டு, மீண்டும் பிரச்சாரத்தின்போது வருவேன், உங்கள் மாவட்டத்திற்கே வந்து உங்களையெல்லாம் மீண்டும் நான் சந்திப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொண்டு, இந்த ஆலோசனைக் கூட்டத்தை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய மாவட்ட கழக நிர்வாகத்துக்கும், வந்திருக்கக்கூடிய அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்து, ‘வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு’ என்று கூறிக்கொண்டு இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.நன்றி, வணக்கம். இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

பங்கேற்றவர்கள்;
அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், சக்கரபாணி, மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், இல.பத்மநாபன், மாநகர மேயர் தினேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, இளைஞர் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோவன், சிவகாமசுந்தரி, மாநகரச் செயலாளர்கள் கனகராஜ், தங்கராஜ், நெசவாளர் அணியின் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், செயலாளர் பரணி மணி, கழக அணிகளின் மாநில நிர்வாகிகள் மணிராஜ், முனைவர் ஜான், கேசவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தினகரன், அம்பால் நந்தகுமார், பொள்ளாச்சி சித்திக், சூர்யா கிருஷ்ணமூர்த்தி, மாநகர மேயர் கவிதா கணேசன், இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள் சீனிவாசன், ஆனந்தகுமார், திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார், கரூர் மாவட்ட அமைப்பாளர் சக்திவேல், மாநகர அமைப்பாளர் கராத்தே பூபதி, எம்.எஸ்.ஆர்.ராஜ் என்கிற மணிகண்ட பிரபு, முத்துக்குமார் உள்பட கழக முன்னணியினர் பலரும் கலந்துகொண்டனர்.

Tags : Deputy ,Chief Minister ,Udayaniti Stalin ,Karur. Karur ,Karur ,Tiruppur Districts ,Perur ,
× RELATED சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுகவின்...