டெல்லி : 2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் அதே நேரத்தில் தொகுதி மறுவரையறை மூலம் மக்களவையில் 273 தொகுதிகளை அதிகப்படுத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023ம் ஆண்டு இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு செயல்படுத்தும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. 2024ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காகவே இந்த சட்டம் அவசர கதியில் கொண்டு வரப்பட்டதாக எதிர்கட்சிகள் அப்போது புகார் தெரிவித்தன. இந்தச் சட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி தொகுதி சீரமைப்பு நடத்த குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவை என்று கூறப்படுகிறது. இதனால் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைப்படிமக்கள் நாடாளுமன்ற தொகுதிகளை முடிவு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்றத்தில் 273 மகளிர் தொகுதிகளை உருவாக்கி மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 2ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் முடிகிறது. அதற்கு முன் மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன் கார்கேதலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகள் நேற்று ஆலோசனை நடத்தின. அப்போது, நடப்பு கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டால் எடுக்க வேண்டிய நிலை குறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தியது.
