வாஷிங்டன்: டிரம்பின் கடுமையான விசா கொள்கைகளால் இந்தியா, சீனா நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபராக 2வது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்ஒரு பகுதியாக விசா விதிகளையும் கடுமையாக்கி உள்ளார். இது ஒரு சிறப்புரிமை (Privilege) என்றும், நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டிரம்பின் கடுமையான விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களும், சீனர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க வௌியுறவுத்துறை மார்ச் மாத தொடக்கத்தில் வௌியிட்ட தரவுகளின்படி, “2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் எட்டு மாதங்களில் 2024ம் ஆண்டை விட 2.5 லட்சம் குறைவான விசாக்களே வழங்கப்பட்டுள்ளன. நிரந்தர குடியுரிமை மற்றும் தற்காலிக விசாக்கள் 11 சதவீதம் குறைந்துள்ளன. இதில் இந்தியா, சீனா நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தற்காலிக விசாக்கள் பொதுவாக மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடிமக்கள் மற்றும் சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் விசாவாகும். அறிக்கையின்படி, 2024ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டில் இந்தியா, சீனா நாட்டினர் 84,000 விசாக்களை இழந்துள்ளனர். வணிகம் மற்றும் சுற்றுலா விசாக்கள் 2025ம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 3.4 சதவீதம் குறைந்துள்ளன. இது ஒரு வருடத்துக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, சுமார் 2 லட்சம் விசாக்கள் குறைந்துள்ளன.
2024ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத கலத்தில், 3.44 லட்சத்துக்கும் அதிகமான மாணவர் விசாக்களை அமெரிக்கா வழங்கியது. இது 2025ம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 2.38 லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது. கடல் மற்றும் விமான பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த விசாக்கள் 30,876ஆகவும், கலாச்சார பரிமாற்ற பார்வையாளர்களுக்கான விசாக்கள் 29,594ஆகவும் குறைந்துள்ளன. வருங்கால கணவன், மனைவிக்காக 2024ம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 37,229 விசாக்கள் அளிக்கப்பட்ட நிலையில், இது 2025ம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 18,894ஆக குறைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
