போர் காரணமாக காஸ் தட்டுப்பாடு எதிரொலி கொளுத்தும் வெயிலில் காலி சிலிண்டர்களுடன் காத்திருந்த பொதுமக்கள்

*கிராம பகுதியில் பரபரப்பு

பெரணமல்லூர் : பெரணமல்லூர் பகுதியில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் கொளுத்தும் வெயிலில் பொதுமக்கள் காத்திருந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து வளைகுட நாடான ஈரானை தாக்கி போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து இதர நாடுகளுக்கு பெட்ரோலியம் உள்ளிட்ட எரிபொருட்களை சப்ளை செய்வதில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் விமான சேவையும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக காஸ் உள்ளிட்ட எரிபொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு காஸ் சிலிண்டர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது. இதனால் இந்தியா அளவில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் உள்ளிட்ட கிராமப்புற பகுதியில் தனியார் ஏஜென்சி மூலம் விநியோகம் செய்யப்படும் காஸ் சிலிண்டர் போர் சூழல் ஏற்படுவதற்கு முன்பு மிகவும் எளிதாக கிடைத்து வந்தது.

அதாவது காஸ் சிலிண்டரை விநியோகஸ்தர்கள் வீட்டுக்கு, வீடு கதவு தட்டி கொடுத்து வந்தனர். ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த நிலைமை அடியோடு மாறி உள்ளது. குறிப்பாக வீட்டிற்கு வீடு தட்டி கொடுக்கப்பட்டு வந்த காஸ் சிலிண்டர் போர் சூழல் ஏற்பட்ட உடன் தெருவில் ஏதாவது ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி சிலிண்டர் விநியோகம் செய்யும் நிலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒரு சிலிண்டர் எடுத்தால் அடுத்த சிலிண்டர் எடுக்க சுமார் 25 நாட்கள் காத்திருக்கும் சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கிராமப்புறங்களில் பொதுமக்கள் நாள்தோறும் வீட்டு வாசலில் சிலிண்டர் எடுத்து வைத்து வண்டி வருமா? வராதா? என ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர்.

மேலும் ஏதாவது ஒரு இடத்தில் கும்பலாக காலி சிலிண்டர்களை எடுத்து வைத்துக்கொண்டு சிலிண்டர் வண்டியை எதிர் நோக்கம் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு சிலிண்டர் வண்டி வரும்போது சிலிண்டர் வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் சண்டையிடும் சூழலும் நிலவி வருகிறது. இதனால் நாள்தோறும் கிராம பகுதிகளில் காஸ் சிலிண்டர் பெறுவதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

Related Stories: