×

அசாம் பாஜவில் கடும் அதிருப்தி மாற்றுக் கட்சியினருக்கு சீட்டு சொந்த கட்சியினருக்கு வேட்டு; சுயேச்சையாக போட்டியிடுவதாக பலரும் மிரட்டல்

 

அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. 126 தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதில் பாஜ 89 இடங்களிலும், அதன் கூட்டணிகளான அசாம் கண பரிசத் 26, போடோலாந்து மக்கள் முன்னணி 11 இடங்களிலும் போட்டியிட உள்ளன. அங்கு 2016ல் இருந்து பாஜ ஆட்சி நிலவுகிறது. இம்முறை ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பாஜ போட்டியிடுகிறது. கடந்த 2015ல் காங்கிரசில் இருந்து பாஜவுக்கு தாவிய ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த 2021ல் இருந்து அம்மாநில முதல்வராக பதவி வகிக்கிறார். காங்கிரசில் இருந்து வந்ததாலோ என்னவோ, அக்கட்சியிலிருந்து யார் பாஜவில் சேர்ந்தாலும் ஹிமந்த தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்து விடுகிறார். 2015க்கு பிறகு இதுவரை காங்கிரசில் இருந்து வந்த 28 பேருக்கு அவர் சீட் கொடுத்துள்ளார். இந்த முறை ஹிமந்தாவின் இந்த நடவடிக்கை பாஜவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜவுக்கு வந்த பிரத்யுத் பர்தோலோய் மற்றும் பூபேன் போராவுக்கு திஸ்பூர், பிஹ்பூரியாவில் சீட் தரப்பட்டுள்ளது. இதனால் பர்தோலோயில் சீட் தரப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூத்த தலைவர் ஜெயந்த தாஸ் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். நீண்ட காலமாக கட்சியில் பணியாற்றி வருபவர்களை புறக்கணிப்பதன் மூலம் அசாம் பாஜவை காங்கிரஸ்-பாஜவாக ஹிமந்தா மாற்றி விட்டதாக தாஸ் வெளிப்படையாக கிளர்ச்சியில் ஈடுபட்டு கட்சியிலிருந்து விலகி உள்ளார். இவர் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதே போல பூபேன் போராவும் சுயேச்சையாக களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.

நியூ கவுகாத்தி, கவுகாத்தி மத்திய தொகுதி, டோலாய், சில்சார், உதார்போண்ட் உள்ளிட்ட பல தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. 2015ல் பாஜவில் ஹிமந்தா இணைவதற்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் அமைச்சரான மூத்த தலைவர் சித்தார் பட்டாச்சார்யாவுக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. 19 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சுயேச்சையாக போட்டியிடுவதாக பலரும் மிரட்டுகின்றனர். இதனால் முதல்வர் ஹிமந்தாவும் மாநில பாஜ தலைவர் திலீப் சைகியாவும் அதிருப்தியாளர்கள் ஒவ்வொருவரின் வீட்டு கதவையும் தட்டி நேரில் சென்று சமாதானம் பேசி வருகின்றனர்.

 

Tags : Assam ,BJP ,Chief Minister ,Himanta Biswa Sarma ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் உதயநிதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்