குருவாயூர் தொகுதி பாஜ சார்பில் இக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி. கோபாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்திற்காக இவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் குருவாயூர் தொகுதியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஒரு இந்து எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே இம்முறை அனைவரும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பாஜ வேட்பாளரின் இந்த வீடியோவுக்கு கம்யூனிஸ்ட், காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பாஜ வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் பல்வேறு தரப்பிலிருந்தும் புகார் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய திருச்சூர் மாவட்ட கலெக்டருக்கு கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து இவர் கூறுகையில், ‘‘தேர்தல் நடைமுறை சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை அனைத்துக் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. குருவாயூர் தொகுதி பாஜ வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் பேசிய வீடியோ தேர்தல் ஆணையத்திடம் கிடைத்துள்ளது.இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து புகார்கள் வந்தன. மாவட்ட கலெக்டரின் அறிக்கை வந்த பின்னர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இதற்கிடையே பாஜ வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதவாதத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜ வேட்பாளரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கோரியும் காங்கிரஸ் மாணவர் சங்கம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜ., வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர் மீது குருவாயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது இவர் தேர்தலில் போட்டியிட தடை இருக்காது என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை வந்தால் ேகாபாலகிருஷ்ணனுக்கு சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
