புதுடெல்லி: எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி சட்டத்திற்கான விதிகள் வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவின் வரி முறையில் முக்கியமான மாற்றங்கள் ஏப்ரல் 1, முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த 1961-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய வருமான வரிச் சட்டம், அமலுக்கு வருகிறது. புதிய சட்டம் எளிமையான மொழியைப் பயன்படுத்துவதாகவும், வரி முறையைப் புரிந்துகொள்வதையும், பின்பற்றுவதையும் எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
2026-ம் ஆண்டு வருமான வரி விதிகள், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட எளிமைப்படுத்தப்பட்ட நேரடி வரிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும். 1961 ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் இருந்த 819 பிரிவுகளின் எண்ணிக்கையை 536 ஆகவும், அத்தியாயங்களின் எண்ணிக்கையை 47-லிருந்து 23 ஆகவும் குறைத்துள்ளது. சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்குப் பொருந்தக்கூடிய வீட்டு வாடகைப் படி விலக்குகளுக்கான முன்மொழியப்பட்ட கட்டமைப்பை வருமான வரி விதிகள் தக்கவைத்துக் கொள்கின்றன. புதிய விதிகளின்படி, மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை, ஐதராபாத், புனே, அகமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய எட்டு நகரங்கள் சம்பளத்தில் 50 சதவீதம் என்ற உயர் விலக்கு வரம்பிற்குத் தகுதி பெறும், அதே நேரத்தில் மற்ற அனைத்து இடங்களிலும் 40 சதவீதம் என்ற வரம்பு தொடரும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
