வேலூர், மார்ச் 21: வேலூரில் பறக்கும் படை சோதனையில் நிற்காமல் சென்ற மேயர் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூர் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோயில் அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்றுமுன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த நீலநிற காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், காரை சோதனையிடும் முன் வேகமாக கார் சென்று விட்டது. இதனால் கார் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நிலை கண்காணிப்பு குழு பொறுப்பாளர் சதீஷ்வேலன் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த காரை ஓட்டிய டிரைவர் கோபிகாந்த், கவுன்சிலர் சதீஷ், மேயர் சுஜாதா ஆகிய 3 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த காரை பறிமுதல் செய்தனர்.
