கூடலூர்: குமுளியில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய பஸ் நிலையம் திராவிடல் மாடல் ஆட்சியில் கட்டப்பட்டு, கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இது தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்டது குமுளி. இருமாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்திலிருந்து இங்கு வரும் பஸ்கள் சாலையில் நிறுத்தப்பட்டு வந்தது. கூடலூர் நகராட்சி சார்பாக தற்காலிக கழிப்பறை அமைக்கப்பட்டு அதை பயணிகள் பயன்படுத்தி வந்தனர். சபரிமலை சீசன், பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும், பயணிகள், பக்தர்கள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமம் அடைந்தனர். பயணிகள் பஸ் நிறுத்தத்தில் வெயில், மழையில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் தமிழக பயணிகள், பக்தர்கள் வசதிக்காக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை பல்லாண்டு காலமாக இருந்தது.
இதை நிறைவேற்றும் விதமாக, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குமுளியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை பஸ் நிலையமாக மாற்றவும், அங்குள்ள பணிமனையை லோயர் கேம்பில் அமைக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதன்பேரில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் குமுளியில் நவீன பஸ் நிலையம் அமைக்க ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக, புதிய பஸ் நிலையத்திற்கு கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணி தொடங்கியது. பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பஸ்கள் நிறுத்தம், 18 வணிக வளாக கட்டிடங்கள், 11 பயணியர் தங்கும் அறைகள், கழிப்பறை, குடிநீர் வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம், சிறிய அளவிலான பணிமனை, போக்குவரத்து பணியாளர் ஓய்வறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டன.
இந்த பணிகள் அனைத்தும் முடிந்து, கடந்த டிச.18-ஆம் தேதி புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு பொதுமக்கள், பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கூடுதலாக பஸ் நிலையத்தில் சுற்றுச்சுவர், ஜெனரேட்டர், உயர்கோபுர விளக்குகள், கேட்டுகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இரு மாநில மக்களும், சபரிமலை பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் இந்த பேருந்து நிலையத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். குமுளி மலையின் மகுடமாய், பயணிகளின் அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் பஸ் நிலையம் நிலையம் மூலம் உரிய தீர்வு ஏற்பட்டுள்ளது. திராவிடல் மாடல் அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
