×

அம்பத்தூர், கும்மிடிப்பூண்டியில் ஆவணம் இல்லாத ரூ.9.50 லட்சம் பறிமுதல்: டிரைவர், உரிமையாளரிடம் விசாரணை

கும்மிடிப்பூண்டி: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருப்பதால், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, ரூ.50 ஆயிரத்துக்குமேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் ரொக்கப் பணம் உள்பட பரிசு பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனைகள் நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். பின்னர் அவற்றை அரசு கருவூலங்களில் ஒப்படைக்கின்றனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பறக்கும் படையினரின் தீவிர வாகன சோதனைகளால் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், அம்பத்தூர் அருகே புதூர் காவல் நிலையம் அருகே நேற்று நள்ளிரவு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே புதூரை நோக்கி வந்த சாதிக் பாட்சா (40) என்பவரின் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 3 லட்சத்து 8 ஆயிரத்து 540 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அதற்குரிய ஆவணங்களை காட்டி அப்பணத்தை பெற்று செல்லும்படி சாதிக் பாட்சாவிடம் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், அப்பணத்தை அம்பத்தூரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல், கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைசாவடியில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படை அலுவலர் பரமசிவம் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து உள்பட அனைத்து கனரக வாகனங்களையும் சோதனை செய்தனர். இச்சோதனையில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு காரை பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அக்காருக்குள் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணம் எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கார் டிரைவர் மற்றும் உரிமையாளர் அமுலுவிடம் பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மூன்று இடங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.5.07 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Ambattur ,Gummidipoondi ,Tamil Nadu ,
× RELATED ரம்ஜான் பண்டிகையையொட்டி...