×

மும்பையில் ேபாதையில் அத்துமீறிய மர்ம நபர்கள்; நள்ளிரவில் நடிகையின் காரை மறித்து ரகளை: போலீசிடம் புகார் அளித்தும் அலட்சியம்

மும்பை: நள்ளிரவில் காரை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட மர்ம நபர்களால் நடிகை நிமிஷா நாயர் கடும் அதிர்ச்சி அடைந்தார். மகாராஷ்டிரா மநிலம் மும்பை பாந்த்ரா கிழக்கு கெர்வாடி மேம்பாலம் அருகே கடந்த 17ம் தேதி அதிகாலை நடிகை நிமிஷா நாயர் வாடகை காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காரின் டிரைவர், முன்னால் சென்ற பைக்கை முந்திச் சென்றார். இதில் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த போதை நபர்கள் இருவர், காரை விரட்டிச் சென்று நெடுஞ்சாலையின் நடுவே மறித்தனர்.

காரை மறித்ததோடு நிறுத்தாமல், டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர். மேலும், காரின் கதவுகளை பலவந்தமாக திறக்க முயன்றதுடன், நடிகையையும் கண்ணாடியை இறக்குமாறு கூறி ரகளையில் ஈடுபட்டனர். பயந்துபோன நடிகை, தனது செல்போனில் இச்சம்பவத்தை வீடியோ எடுக்கத் தொடங்கியதும், அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து நிமிஷா நாயர் கூறுகையில், ‘இந்த பிரச்னை குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளேன்.

ஆனால் இதற்காக கார் டிரைவர் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும் என போலீசார் கூறுகின்றனர். தினசரி வருமானத்திற்காக உழைக்கும் டிரைவர்களுக்கு இது சிரமமான காரியம். மேலும் போக்குவரத்து போலீசாரின் செயலியில் வீடியோ ஆதாரங்களை பதிவேற்ற முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த ஜனவரி 1ம் தேதியன்று கொலாபா பகுதியில் நடிகை நிமிஷா நாயர் சென்றபோது, இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது. அது தொடர்பாக அவர் ஏற்கனவே போலீசில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது.

Tags : Mumbai ,Nimisha Nair ,Kherwadi ,Bandra East ,Maharashtra ,
× RELATED சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 10...