சேலம்: சேலம் அருகே அரியானூரில் அரசு பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அரியானூரில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று காலை வந்துகொண்டிருந்தது. சேலம் மாநகரை ஓட்டியுள்ள அரியானூரிர் அருகே பேருந்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய அந்தப் பேருந்து முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனம் மற்றும் டெம்போ வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் டெம்போவில் இருந்தவர்கள் என மொத்தம் 7 பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தின் தாக்கத்தால் பேருந்தின் முன்பகுதி மற்றும் மற்ற வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பேருந்தின் பிரேக் பழுதானதா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது குறித்து போவீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
