சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஏப்ரல் 23ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து, மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 23ம் தேதி (வியாழன்) மாநிலம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நாளில் (ஏப். 23ம் தேதி) தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக உரிமையை எந்தவித தடையுமில்லாமல் பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையிலும், எந்த அச்சமும் இல்லாமல் வாக்களிப்பதையும் நினைவில் கொண்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் இந்த சலுகையை உறுதி செய்துள்ளது. இதனை மீறும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் அந்தந்த தேர்தல் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு, வாக்கு சதவீதத்தை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘உங்கள் வாக்கு உங்கள் உரிமை’ என்ற அடிப்படையில், வேலைப்பளு காரணமாக எவரும் வாக்களிப்பதை தவிர்த்துவிடக் கூடாது என்பதே இந்த விடுமுறை உத்தரவின் முக்கிய நோக்கமாகும். வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு அன்று, தங்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இதர ஆவணங்களுடன் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பொதுமக்களிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
