சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டமன்ற தொகுதி / பகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளையும் ஒதுக்கீடு செய்வதற்கு, முதல் நிலை பரிசோதனை நிறைவடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளும் மாவட்ட தேர்தல் அலுவலரால் முதலாவது சமவாய்ப்பிற்கு உட்படுத்தபடும் (ரேண்டம்).
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் முதலாவது சமவாய்ப்பிற்குட்படுத்துதல் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (20ம் தேதி) – தர்மபுரி, அரியலூர், 23ம் தேதி – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, 24ம் தேதி – சேலம், புதுக்கோட்டை, விருதுநகர், 25ம் தேதி – தேனி ஆகிய மாவட்டங்களில் சமவாய்ப்பிற்கு உட்படுத்தப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் முதலாவது சமவாய்ப்பிற்குட்படுத்துதல் (ரேண்டம்) அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை முறை (EMS) வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலரால் மேற்கொள்ளப்படும். முதலாவது சமவாய்ப்பிற்குட்படுத்துதல் நிறைவடைந்த பின்னர், தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் பட்டியல்கள் மாவட்ட தலைமையிடங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடன் பகிரப்படும்.
இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள், தேர்தலில் பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு/உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்படும். இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளும், அங்கீகாரம் பெற்ற தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்தந்த சட்டமன்ற காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்த பின்னர், முதலாவது சமவாய்ப்பிற்குட்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் பட்டியல் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பகிரப்படும்.
* தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு படைகளின் பணியமர்த்தல் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே மத்திய ஆயுத பாதுகாப்புப் படையின் 50 கம்பெனிகளை கடந்த 10ம் தேதி அனுப்பியுள்ளது. தற்போது, மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதலாக மத்திய ஆயுத பாதுகாப்பு படையின் 250 கம்பெனிகளை பாதுகாப்பான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்காக நியமித்துள்ளது. அந்த கம்பெனிகள் 6.4.2026 மற்றும் 13.4.2026 அன்று தமிழ்நாட்டிற்கு வர உள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் ஒரு தொகுதிக்கு ஒரு கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கம்பெனியில் அதிகப்பட்சமாக 100 வீரர்கள் இருப்பார்கள்.
* அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கைப்பேசி செயலி பயன்படுத்துதல் பற்றிய பயிற்சி இந்திய தேர்தல் ஆணையம் மூலம் நேற்று காணொலி வழியாக வழங்கப்பட்டது. இந்த கைப்பேசி செயலியின் மூலம், வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு நிலவரங்களை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பதிவு செய்வதற்கான வசதிகள் உள்ளது.
* தேர்தல் நாளன்றும் மற்றும் தேர்தல் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவும், எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ அல்லது வேறு எந்த அமைப்போ அல்லது நபரோ, மாநில/மாவட்ட அளவிலான ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் உள்ளடக்கத்தை முன்-சான்றொப்பம் பெறாமல், அச்சு ஊடகங்களில் எந்தவொரு அரசியல் விளம்பரத்தையும் வெளியிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
