சென்னை: பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்பட 49 தலைப்புகளில் 462 பக்கத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது நாம் தமிழர் கட்சி. தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை நாம் தமிழர் கட்சி இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். ஏற்கனவே அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுவரும் சீமான் இன்று 49 தலைப்புகளில் 462 பக்கத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
* தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும்.
* நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிகளில் பெண்களுக்குத் தனித் தொகுதிகள் பெற நடவடிக்கை.
* மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி என மாற்ற ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
* நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
* படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும்.
* பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் மரண தண்டனை. வேறு எவருக்கும் மரண தண்டனை கிடையாது.
* படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும்.
* தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி நடத்தப்படும்.
* மாணவர்களின் கல்விக் கடன்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும். உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளது நாம் தமிழர் கட்சி.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுச் சீமான் பேசியபோது கூறியதாவது; இந்த அறிக்கையில் உள்ளவை எல்லாம் எங்கள் கனவுகள். இதில் உள்ளவை எல்லாம் செய்யமுடியாதவை இல்லை. இவையெல்லாம் உலக நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆட்சி முறையை மாற்ற வேண்டும் என நாங்கள் பயணிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
