சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 250 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு வருகை!

 

சென்னை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 250 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 35 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில், திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது. இதனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை வேகப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட தொகுதி பங்கீட்டை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது. திமுகவில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், மதிமுகவுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, கொமதேகவுக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கவும், நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும், தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜிபே, ஃபோன்பே உள்ளிட்டவை மூலம் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டால் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வங்கி ஊழியர்களுக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலை ஒட்டி சென்னையில் நகை அடகு கடைகள், திருமண மண்டபங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய இடங்களில் வரும் ஏப்ரல் 9ம் தேதியும், மேற்குவங்கத்தில் ஏப். 23, 29 தேதிகளிலும் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழிலாளர் நலத்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு வந்துள்ள நிலையில், இன்று கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 20,000 வீரர்கள் வருகை தந்துள்ளனர். ஒரு தொகுதிக்கு ஒரு கம்பெனி என்ற அடிப்படையிலும், கூடுதல் தேவைக்காகவும் மொத்தமாக 300 கம்பெனி வீரர்கள் பாதுகாப்பு பனியில் ஈடுபடுவார்கள் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: