கோவை: கோவையில் பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு செருப்பு மாலை அணிவித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்களை இழித்தும் பழித்தும் பேசி வரும் அதிமுகவினரை கண்டிக்கிறோம் என்று செருப்பு மாலை அணிவித்துள்ளனர். இது பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொள்ளாச்சியில் அவர்களின் உருவப்படங்களுக்குச் செருப்பு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை வைத்தவர்கள் யார் என தெரியவில்லை என கூறும்
காவல்துறையினர், அவர்களை தேடி வருவதாக கூறுகின்றனர்.
தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும், கண்டித்தும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடந்த 17-ந் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, ஆட்சி முடிந்தும் போகும்போது, உங்கள் கனவை சொல்லுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்கிறார். எனக்கு நயன்தாரா வேண்டும். எனது கனவை நிறைவேற்றுவாரா என பேசினார். இது அரசியலாக்கப்பட்டு, அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். இதுபோல பலரும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிமுகவினர் புகார் கொடுத்த பிறகே, விரைந்து வந்த போலீசார் சர்ச்கைக்குரிய அந்த 3 பேரின் கட்-அவுட்டுகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து செருப்பு மாலை கட்-அவுட் கட்டியவர்கள் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவத்துள்ளது. இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க மர்ம நபர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
