ஆறுகள் பூமியின் ரத்த ஓட்டம்போல பூமி எங்கும் ஓடுகின்றன. இவை காற்றில் உள்ள கரிமத்தை கரைத்து கடலில் கொண்டுபோய் சேர்க்கின்றன. ஆறுகள் ஓடுவதால் சமவெளிகளும் வளமான நிலங்களும் உருவாகின்றன. ஆறுகள் பூமியை வடிவமைக்கும் சிற்பிகளாக விளங்குகின்றன. இப் பூமியில் 329 மில்லியன் ஹெக்டேர் நிலம் ஆறுகளால் கவரப்பட்டுள்ளன.
மனித நாகரிகத்தின் தொட்டில்
ஆறுகளே நாகரிகத்தின் தொட்டிலாகும். மனித நாகரீகம் செழிப்பதற்கு ஆற்றுப் படுகைகளே உலகெங்கும் உதவியுள்ளன. ஆறுகள் உணவைத் தருகின்றன. நீர்வழிப் போக்கு வரத்துக்கும் உதவுகின்றன. வயல்களில் நிறைய விளைந்த பொருட்களை அடுத்த பகுதிக்கு ஏற்றுமதி செய்யவும், அங்கிருந்த பொருட்களை இறக்குமதி செய்து கடல் வழியே நதி வழியே படகுகளில் கொண்டு வரவும் உதவுகின்றன. ஆற்றுப் படுகைகளில் வாழும் மக்கள் உணவு உற்பத்தி, தொழில் என்ற இரண்டு துறைகளிலும் செழிப்பாக இருக்கின்றனர்.
ஆற்றங்கரையில் தோன்றிய குடும்பு
நன் நீர் நிறைந்த ஆற்றங்கரைப் பகுதி மருத நிலம் எனப்பட்டது. இங்கு வயலும் வயல் சார்ந்த நிலமும் மக்களால் பண்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்தன. வயலில் பாடுபட்டு பயிர் விளைவித்த ஆண்கள் தம் உழைப்பின் பலனை தமக்கு உரியவர்களே அனுபவிக்க வேண்டும் என்று நினைத்த காரணத்தினால் வாரிசுரிமையை உருவாக்கு வதற்காகப் பெண்களைத் திருமணம் செய்து குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்தினர். பல குடும்பங்கள் சேர்ந்தது ஒரு குடும்பு. குடும்பு என்றால் மக்கள் வாழும் ஒரு நிலப்பகுதி. ஒரு குடும்பில் பல குடும்பங்கள் இருக்கும். அதற்குத் தலைவனாக ஒரு ஊர் குடும்பன் இருப்பது மரபு. கணவனும் மனைவியும் இணைந்து பிள்ளைகளைப் பெற்று கணவன் வயல் வேலைகளையும் மனைவி குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு பிள்ளைகளை வளர்த்துப் பெரியவர்களாக்கி தங்கள் நிலபுலன்களுக்கு அவர்களைச் சொந்தக்காரர்கள் ஆக்கினர்.
நதிக்கரையில் தொழில் வளர்ச்சி
உழவுத் தொழிலைச் சார்ந்து தச்சுத் தொழில், கட்டடத் தொழில், மண்பானை செய்யும் தொழில், தோல் பொருட்கள் செய்யும் தொழில் மற்றும் மக்களுக்குத் தேவையான நெசவாளர், நாவிதர், சலவைக்காரர் என்று பல்வேறு தொழில் செய்யும் குடும்பங்கள் விவசாயிகளின் தெருக்களைச் சுற்றி குடியிருந்தன. இவ்வாறு ஒரு ஊர் உருவாகியது. ஒவ்வொரு தொழில் செய்தவரும் தன்னுடைய சொந்த பந்தங்களோடு ஒரு தெருவையே ஆக்கிரமித்துக் குடியிருந்தனர்.
மருத நிலத்தின் தலைவன் ஊரன், மகிழ்நன் என்று அழைக்கப்பட்டான். கூடுதலாக விளைந்த பொருட்களை வண்டிகளிலும் ஆற்றில் படகிலுமாக கொண்டு சென்று அடுத்த ஊரில் விற்றனர். பல வண்டிகளில் சரக்குகளை எடுத்துக் கொண்டு அடுத்த ஊர்களுக்குச் சென்றனர். இதனால் வியாபாரம் பெருகியது. சரக்குகளைப் பாதுகாக்க கிட்டங்கிகளை கட்டினர். மனிதர்கள் வாழ சுற்றுச் சுவர் கொண்ட காவல் மனைகளை எழுப்பினர். இவ்வாறாக ஆற்றங்கரைகள் தோறும் நகரங்கள் பெருகின. உலகெங்கும் ஆறுகள் மனித நாகரீகத்தின் தொட்டில்கள் ஆயின.
மூவேந்தரும் நதிக்கரை தலைநகரங்களும்
மருத நிலத்தின் அல்லது நன்செய் நிலத்தின் கடவுள் வேந்தன் அல்லது இந்திரன் எனப்பட்டான். வைகை நதிக்கரை நகரமான மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்டவன் உலக வரலாற்றில் நீண்ட ஆட்சிக் காலத்தைக் கொண்ட பாண்டியன் ஆவான். காவிரி ஆற்றங்கரையில் உறையூர், தஞ்சை, காவிரி பூம்பட்டினம் போன்ற தலைநகரங்களை உருவாக்கி ஆட்சி செய்தவர் சோழர்கள். வஞ்சி நதிக்கரையில் உள்ள வஞ்சி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் சேரர்கள். இவ்வாறு மூவேந்தரும் தங்களுடைய தலைநகரத்தை நதியின் கரையிலேயே எழுப்பியிருந்தனர்.
நதி துதியும் சப்த தாராவும்
இந்தியாவில் நதி வழிபாடு வேத காலம் தொட்டு தொடர்கின்றது. ரிக் வேதத்தில் 10.75.5 என்ற சூக்தம் நதியைப் பற்றிய துதியாகும். வட இந்தியாவில் சிந்து பகுதியில் சப்ததாரா என்று ஏழு நதிகள் பாய்ந்தன. அவை சரஸ்வதி, சிந்து விதஸ்தா, அசிகினி, ஐராவதி, விபாசா, ஷதுத்ரு ஆகியன. இவற்றை சப்த தாரா என்றனர். இவை தவிர கங்கா, யமுனை, பிரம்மபுத்திரா நதிகளும் வடக்கே பாய்கின்றன. இந் நதிக்கரைகளில் குப்தர், மௌரியர், நந்தர் பின்னரே அரச வம்சத்தினர் ஆட்சி செய்தனர்.
நதி வழி திசைப் பெயர்கள்
தென்னிந்தியாவை மகாநதி, தப்தி, கிருஷ்ணா, கோதாவரி போன்ற ஆறுகள் வளப்படுத்துகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து பல நதிகள் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. கிழக்குப் பகுதி பள்ளமாக இருப்பதால் அதனைக் கீழ் திசை என்றும் மேற்குப் பகுதி உயரமாக இருப்பதால் அதனை மேல் திசை என்றும் அழைக்கின்றனர் ஆறுகளின் போக்குகளின் படியே திசைகளின் பெயர்களும் மேற்கு, கிழக்கு என்று அமைந்துள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகள் இடையறாமல் நீண்டு அமைந்துள்ளன. ஆனால், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆறுகளால் ஊடறுக்கப்பட்டுச் சிதறலாக காணப்படுகின்றன. இந்த ஆறுகள் மலைகளை அறுத்துப் பாய்ந்து வங்காளக் கடலில் கலக்கின்றன.
நதிக்காக நடந்த போர்கள்
இந்தியப் புராணங்களில் இரண்டு கதைகள் நதிகளுக்காக நடந்த போர்களை விவரிக்கின்றன. விருத்ராசுரன் ஏழு நதிகளையும் ஓடவிடாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்தான். இந்திரன் ததீசி முனிவரின் முதுகெலும்பைப் பெற்று அதனை வஜ்ராயுதமாகக் கொண்டு விருத்ராசுரனுடன் போரிட்டு ஏழு நதிகளையும் மீட்டான். இரண்டாவதாக யமுனை நதியில் காளிங்கன் என்னும் நாகம் யாரையும் அங்குத் தண்ணீர் குடிக்க விடாமல் குளிக்க விடாமல் விஷத்தைக் கக்கித் தண்ணீரை விஷமாக வைத்திருந்தது. ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்க இயலவில்லை. கிருஷ்ண பரமாத்மா அந்த நாகத்தின் தலையை நசுக்கிக் கொன்றார். இதுவே காளிங்க நர்த்தனம் எனப்பட்டது. இவ்விரண்டு கதைகளும் நதிகளை தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் குணம் அக்காலத்தில் இருந்ததைக் குறிக்கின்றது.
மன்னர்கள் நதியைத் தமது உடமையாக்கிக் கொள்ளத் துடித்தனர். காரணம் நதியினால் தன் நிலத்தை வளமைப்படுத்தலாம். இதனால் செல்வச் செழிப்புப் பெருகும். ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியாக வாழலாம். இதனால் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் நதிநீர்ப் பங்கீட்டுக்கு ஒப்புக் கொள்ளாமல் இன்றைக்கு இருப்பதைப் போலவே அன்றைக்கும் நதியைத் தன்னுடைய தனி உடமையாகக் கருதினர்.
நதி ஓர் பெண் தெய்வம்
உலகளவில் நதியைப் புனிதமாகவும் பெண்ணாகவும் கருதுகின்றனர். இந்தியாவில் அசாமில் காமாக்கியா கோயிலுக்கு அருகில் ஓடும் பிரம்மபுத்திரா நதி ஜூன் மாதத்தில் மாதவிடாய் காரணமாக சிவப்பு நிறம் ஆகிவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. நதி பெண் தெய்வம் என்பதால் ஆடிப் பெருக்கின் போது காவிரியில் வரும் புதுப்புனலுக்கு பூவும் பொட்டும் பழமும் காணிக்கையாக்கி தீபம் ஏற்றுகின்றனர்.
நாம் நதியைப் புண்ணிய நதி என்று அழைப்பது போலவே இவர்களும் ஒவ்வொரு நதிக்கும் முன் ஒட்டாக (prefix) திரு என்பது போல டியா, (deya) அகஸ்டோஸ் என்று சொல்லைச் சேர்த்து அழைத்தனர். இந்தியாவில் கங்கா தேவி, யமுனா தேவி, காவிரி அன்னை, வேகவதி என்று பெண் பெயர் சூட்டுவது போல் அங்கும் பெண் பெயரிட்டு விளித்தனர். சீன் நதியின் (Siene) தெய்வப் பெயர் சீக்குவானா. (Yonne) யோன் நதியின் தெய்வப் பெயர் இக்கானா, டான்யூப் நதியின் தெய்வப் பெயர் தனுவியஸ். முதல் இரண்டும் பெண் தெய்வப் பெயர்கள் ஆகும்.
நிலவும் நதியும்
நதிகளை வளமைத் தெய்வமாக போற்றுகின்றனர். முழு நிலவு நாட்களில் நீர்நிலை ஓரம் மக்கள் ஆடிப் பாடிக் கூடி மகிழ்வது பழங்கால மரபாகும். கொண்டாட்டங்களை நதிக் கரையில் நடத்துகின்றனர். நதிகளே சொர்க்கத்தின் வாசல் என்றும் நம்புகின்றனர். ஏரிக் கரையிலும் நதிக்கரையிலும் கடற்கரையிலும் ஆண்களும் பெண்களும் கூடி மகிழ்ந்த தகவல்கள் தமிழ் இலக்கியங் களில் காணக் கிடைக்கின்றன.
பங்குனி பௌர்ணமியான பங்குனி உத்திரம் முதல் சித்ரா பௌர்ணமி வரை 28 நாட்கள் இந்திர விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாதவியும் கோவலனும் கடற்கரையில் இருந்த வேளையில் மாதவி பாடிய கானல் வரியினால் மனம் கசந்த கோவலன் அவளை விட்டுப் பிரிந்தான் என்பது சிலப்பதிகாரம் காட்டும் காட்சியாகும். வைகை நதியில் புதுப் புனல் வரும் போது ஆண்களும் பெண்களும் தேரில் வந்து நதியில் குதித்து விளையாடி மகிழ்ந்ததாக பரிபாடல் விளக்குகின்றது.
நதியின் மகன்
நதிக்கரை ஓரத்து நாயகர்கள் நதியின் மகன் என்று அழைக்கப்பட்டனர். பல நாட்டு மக்களிடையே வழங்கும் பழம் புராணங்களில் தண்ணீரில் கிடைத்த குழந்தை பற்றிய கதைகள் இடம்பெற்றுள்ளன. அயர்லாந்தில் தண்ணீரில் கிடைத்த குழந்தையை காங்கோ பார் (Conchobar) என்று அழைத்தனர். இந்த தெய்வக் குழந்தையின் தாயின் பெயர் நேஸ்சா (Nessa). இந்துப் புராணங்களில் பலரின் பிறப்பு நதியோடு தொடர்புடையது. சிவபெருமானின் ஜீவ சக்தியானது கங்கையோடு கலந்து காங்கேயனைப் பெற்றாள். அவனைக் கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர் எடுத்து வளர்த்தனர். எனவே அவன் கார்த்திகேயன் என்றும் பெயர் பெற்றான். இது ஸ்கந்த புராணத்தில் வரும் வடமொழிப் புராணக் கதை. கங்கையின் மகனான பீஷ்மரும் தன் தாயின் பெயரால் காங்கேயன் எனப்பட்டார்.
இங்கு கங்கையின் புத்திரன் காங்கேயன் என்று அழைப்பதை போலவே செல்டிக் இன மக்களும் துப்ரோ என்ற நதியில் பிறந்தவன் துப்ரோ ஜினோஸ் (Dubro genos) என்று அழைத்து அவனைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர். எனி ஜீனோஸ் என்ற கடவுள் (Aenus) எனுஸ் என்ற நதியின் மகன் ஆவார்.
நதி நாயகர்கள்
கிருஷ்ணன் சிறைச்சாலையில் எட்டாவது மகனாகப் பிறந்ததும் அவனைக் கம்சனின் கொலைச் செயலில் இருந்து காப்பாற்ற வேண்டி கூடையில் வைத்து அவன் தந்தையார் தலைமேல் சுமந்தபடி ஆற்றைக் கடந்து ஆயர்பாடியில் கொண்டு வந்து விட்டு விட்டார். அப்போது ஆற்றில் பெருவெள்ளம் வந்தது. அந்த ஆற்றின் தலைவனான ஆதிசேஷன் என்னும் பாம்பு கிருஷ்ணன் மழையில் நனையாமல் இருக்க குடையாக விளங்கியது.
ஊருக்குத் தெரியாமல் குழந்தை பெற்ற குந்தி தேவி அஞ்சி நடுங்கி தன் குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விட்டாள். ஆற்றோரமாகத் தேரில் வந்த மன்னன் ஒருவன் ஆற்றில் அழகான பெட்டி மிதந்து வருவதைப் பார்த்து தேரோட்டியிடம் அந்தப் பெட்டியை எடுத்து வா என்றான். தேரோட்டி மன்னரிடம் ஐயா பெட்டி உங்களுக்கு பெட்டியினுள் இருக்கும் பொருள் எனக்கு என்று கூறிவிட்டுச் சென்றான். பெட்டியை மன்னருக்குக் கொடுத்துவிட்டு பெட்டிக்குள் இருந்த குழந்தையை அவன் எடுத்து வளர்த்தான். அவனே தேரோட்டி மகன் கர்ணன்.
நதிக்கரைத் திருத்தலங்கள்
நதிகள் காக்கும் கடவுளாகப் போற்றப்பட்டு வந்த காலத்தில் அதன் கரையிலும் நீரிலும் ஆண்டுக்கு ஒரு முறை பல வழிபாட்டுச் சடங்குகளைச் செய்தனர். பின்பு மாத வழிபாடுகளும் வார வழிபாடுகளும் நடந்தன. காலப்போக்கில் வழிபாட்டு சடங்குகள் செய்த கரையில் நிரந்தரமாக ஒரு கோயில் எழுப்பினர். கோயில் கட்டப்பட்டதும் அங்கு பற்பல தெய்வங்கள் இடம் பெற்றன. வழிபாடுகள் பெருகின. மக்கள் அந்த இடத்தைப் புண்ணிய தலமாகவும் போற்றத் தொடங்கினர். இந்தியாவில் நதிக்கரை நகரங்கள் பல தெய்வத் திருத்தலங்களாகப் போற்றப்படுகின்றன. காசி, மதுரா, பிரயாகை, உஜ்ஜயினி போன்றவை நதிக்கரையில் அமைந்த புண்ணியத் தலங்கள் ஆகும்.
நதிகளின் சங்கமம்
ஒரு பேராறு உருவாக பல சிற்றாறுகள் (tributaries) இணைகின்றன. பேராற்றில் இருந்து பல கிளை ஆறுகள் பிரிந்தும் (distributaries) செல்கின்றன. இவ்வாறு ஆறுகள் ஓரிடத்தில் இணையும் போது அந்த இடத்தை திரிவேணி சங்கமம் என்பர். இரண்டு நதிகள் இணையும் இடத்தில் மூன்றாவதாகப் பூமிக்கு அடியில் சரஸ்வதி வந்து சேர்வதான நம்பிகையுடன் மூன்று நதிகள் சங்கமமாகும் இடத்தில் ஓர் ஆலயத்தை எழுப்பி வழிபடுவது தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது.
தமிழகத்தில் பவானியும் காவிரியும் சேரும் இடத்தில் சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. முக்கூடல் எனப்படும் தாமிரபரணி, சிற்றாறு, கோதண்டராம நதி என்ற மூன்று நதிகள் கூடும் இடத்தில் கொண்டல் அலங்காரப் பெருமாள் கோயில் உள்ளது. காவிரியும் கொள்ளிடமும் பிரிந்து ஒன்று சேரும் இடத்திற்கிடையில் உள்ள மணல்மேட்டில் ஸ்ரீரங்கம் உள்ளது. இது தவிர காவேரி நதியின் வடகரை, தென்கரையோரத்து சிவன் கோயில்களும் நதி வழிபாட்டின் தொடர்ச்சியாக தோன்றிய கோயில் வழிபாட்டின் சின்னங்கள் ஆகும்.
(தொடரும்…)
முனைவர் செ. ராஜேஸ்வரி
