ஒவ்வோர் ஊரிலும் திருக்கோயில்களில் தெய்வத் திருமணங்கள் நடக்கும். அவையெல்லாம் அந்தந்த திருத்தலத்தில் நடந்த நிகழ்வுகள். ஆனால், காலப் போக்கில் அந்த நிகழ்வுகள் மறந்துபோய் – மறைந்து போய்விட்டன. அப்படிப்பட்ட `தெய்வத்திருமணம்’ ஒன்றைப்பார்க்கலாம். ஊருக்குநடுவில் கோயில்… மந்தார மரம் ஸ்தல விருட்சமாக இருப்பதால், ஸ்வாமிக்கு “மந்தாரவனேஸ்வரர்’’ எனும் திருநாமம் அமைந்துள்ளது. மண்டூகம் எனும் தவளைக்கும் முக்தி அளித்த இத்திருத்தலத்தில், மக்களின் இறுதி நாளில் அவர்கள் காதுகளில் அஞ்செழுத்தை ஓதி அருள்புரியும் அன்னை “அஞ்சனக்கண் அம்மை’’ என அழைக்கப்படுகிறாள். பெயருக்குத் தகுந்தாற்போல், மங்கலங்களை அருளும் திருத்தலம்.
இத்திருத்தலத்தை ஆற்றூர் என்றும் அழைப்பார்கள்.மண்ணியாற்றங்கரையில் இருக்கும் இத்திருத்தலத்தில், உத்தமதானர் என்ற வேதியர் வாழ்ந்து வந்தார். கலைகள் பலவற்றை அறிந்திருந்த அவர் வேதவல்லுனராகவும் சிவ பக்தியில் சிறந்தவராகவும் இருந்தார். உத்தமரான அவர் மனைவி பெயர் மங்களம். இல்லறத்தை நல்லறமாக நடத்திய அவர்களின் மகள்பெயர் கயல்கண்ணி. அவள் பேசத் தொடங்கிய நாள்முதல், தந்தையின் மடியிலேயே தங்கி வளர்ந்தாள். கற்கவேண்டியதையெல்லாம் தந்தையிடமே கற்றாள். தந்தை கோயிலுக்குப் போகும்போது, தானும்கூடப் போவாள். மந்தாரவனேசரையும் அஞ்சனக்கண் அம்மையையும் மாறிமாறி தரிசிப்பாள்.
“தாயே! தேவீ! உன்னரு ளைத்தா! அம்மா!’’ என வேண்டுவாள். தந்தை மகிழ்ந்தார்.“நல்ல பக்தி உள்ள குழந்தையைத் தெய்வம் தந்திருக்கிறது’’ எனத்தெய்வத்தைத் துதித்தார். கயல்கண்ணி கல்யாணவயதை அடைந்தாள். உத்தமதானரைப்பார்க்க அவ்வப்போது வேதியர் பலர் வருவார்கள். அவர்களுக்கெல்லாம் சிவபெருமானின் மகிமை, ஜீவன்களின்நிலை, ஆணவம் முதலானவைகளின் செயல்பாடு ஆகியவற்றைப்பற்றித் தெளிவாக, சலிக்காமல் சொல்லுவார் உத்தமதானர்.
கயல்கண்ணிக்கு அவற்றைக்கேட்கவேண்டும் என்ற, ஆசை அதிகமாக இருந்தது. ஆனால் மணப்பருவத்தையடைந்த அவள், பல்லோர் முன்னிலையில் வந்து பரம்பொருளைப் பற்றிக்கேட்க வெட்கப்பட்டு, கதவின் பின்னால் இருந்து கவனமாய்க்கேட்பாள்.
ஒருநாள்…
“தேவர்கள் எல்லோருமே நம்மைப் போலப் பசுக்கள்தான். பசுக்கள் பசுக்களைத் திருமணம் செய்து கொள்ளுமா என்ன? மாபெரும் பதியைத்தான் மணம்புரியவேண்டும்.மந்தாரவனேஸ் வரரே பசுபதி. அவரை வணங்கித் துதித்துத்தெளிவு பெறுவதே, நம் வாழ்வின்பயன்’’ என உத்தமதானர் விளக்கம் சொன்னார். அப்போது கதவின்பின்னாலிருந்து தந்தையின் வார்த்தைகளைக்கேட்டுக் கொண்டிருந்த கயல்கண்ணி, எதையெதையோ நினைத்து நினைத்து, ஒரு தீர்மானத்திற்கு வந்தவளைப்போல உள்ளே போனாள். அப்போது இரவு எட்டுமணி ஆனது. தாயின் கையில் ஒரு துணிமுடிப்பைக்கொடுத்த கயல்கண்ணி,
“இதை நீயே வைத்திரு
அம்மா!’’ என்றாள். குழப்பத்தோடு துணிமுடிப்பைப்பிரித்துப் பார்த்தாள் தாயார். குழப்பம் அதிகமாகியது;“மகளே! என்ன இது? உன் நகைகள் அனைத்தையும் மூக்குத்தி உட்பட இப்படிக்கழற்றி, என்னிடம் கொடுத்துவிட்டாயே! ஏன்? என்னவாயிற்று?’’ எனக் கேட்டாள். கண்களில் விரக்தி தெரியக் கயல்கண்ணி பதில் அளித்தாள்; “எதற்கம்மா வீணாக இவைகள்? இப்போதுவேண்டாம். ஒரு நல்லநேரம் வரும்போது, நானே எடுத்துப்போட்டுக் கொள்கிறேன்’’ என்றாள்.
“இப்போது நல்ல காலமில்லையென்று யார் சொன்னது? ஏராளமான பட்டுப்புடவைகள் இருக்க, ஒரு சாதாரண நூல் புடவையைக்கட்டிக் கொண்டிருக்கிறாயே!என்ன கோலம் இது?’’ எனப்பொருமினாள் தாய். அதற்குக் கயல்கண்ணியிடம் இருந்து பதில் இல்லை. நாளாக நாளாகக் கயல்கண்ணி முகத்தில் ஓர் ஏக்கம் தெரிந்தது. ஒரு வேளைதான் உண்டாள். உடல் இளைத்தது.
ஒருநாள்…
இரவு பன்னிரண்டு மணிக்குமேல்
ஆகிவிட்டது. தாயார்,
“நீங்கள் எப்போதும் வேத – உபநிடத விசாரணை செய்து கொண்டிருக்கிறீர்களே தவிர, மகளைப்பற்றிய சிந்தனையே உங்களுக்கு இல்லை. கயல்கண்ணி ஏதோ விரக்தியில் இருக்கிறாள். அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணமில்லையா உங்களுக்கு?’’ எனத் தன் மனக்குறையைக் கணவரிடம் வெளியிட்டாள்.“சீக்கிரமாகவே முடித்து விடலாம். அதன்பிறகு அவள் அமைதியாக இருப்பாள். விரக்திபோய்விடும்’’ என்றார் தந்தை. அவர்கள் பேச்சு விழித்துக்கொண்டிருந்த கயல்கண்ணியின் காதுகளில் விழுந்தது; விரக்தியுடன் வேதனையும் கொண்டாள் அவள். மறுநாள் பொழுதுவிடிந்தது. கயல்கண்ணி தந்தையை வணங்கினாள்.
“என்னம்மா இது? முகத்தில் வாட்டம் தெரிகிறது. ஏனிப்படி? சொல்!’’ என்றார் தந்தை. கயல்கண்ணி பதில் சொல்லத் தொடங்கினாள்;“அப்பா! நாமெல்லாம் பசுக்கள். நாம் பதியாக இறைவனைச் சேர வேண்டும். இதைத்தவிர, மற்றவையெல்லாம் சுமைதானே தவிர, மகிழ்வைத்தராது. நம் பிறவிப்பயனே இறைவனை அடைவதுதான் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? வேத விற்பன்னரான உங்கள் வாக்கைக் கேட்டு, அன்றுமுதல் நான் மந்தாரவனேஸ்வரரையே, என்பதியாக (கணவராக) கருதிவருகிறேன். இதைப் புரிந்துகொள்ளாமல், எனக்குமாப்பிள்ளைதேட முயற்சி செய்கிறீர்கள். மந்தாரவனேஸ்வரரைத்தவிர, மற்றையோரை மனதால்கூட மணவாளனாக நினைக்கமாட்டேன்’’ என்றாள் கயல்கண்ணி. தந்தை திடுக்கிட்டார். சற்று தெளிவுபடுத்திக் கொண்டு,
“அம்மா! நான் சொன்னது ஞான நூல்களில் இருப்பதை. எல்லோருக்கும் அந்நிலை கைகூடாது தாயே!’’ என்றார். கயல்கண்ணி தொடர்ந்தாள். “நீங்கள் சொல்வது நியாயமா? நல்வழி காட்டும் நூல்களை எட்டிப் பார்ப்பது; அனுபவத்தில் அவற்றைக் கொண்டுவராமல் தூரப்போவது; வாயால் வேதாந்தம் பேசுவதில் வாழ்நாளைக் கழிப்பது இவையெல்லாம் சரியா அப்பா?’’ எனக்கேட்டாள். கேள்விக்கணைகளால் தாக்கப்பட்ட தந்தை தொடர்ந்தார்.
“மகளே! உன்பேச்சு நன்றாக இருக்கிறது. பேசுவது சுலபம். அதை அனுபவத்தில்கொண்டு வருவது மிகவும். கடினம்.. நான் என்ன மலயத்துவஜ பாண்டியனா? உன் அன்னை காஞ்சனமாலையா? நீ மதுரை மீனாட்சி என்றா, உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறாய்? விதண்டாவாதம் பேசாதே!’’ என்று கடுகடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
ஞானநூல்களில் கரைகண்ட தந்தை இப்படி இருக்கிறாரே என்று கண்ணீர்விட்டாள் கயல்கண்ணி. தாயார் வந்தாள்.“என்னடி இது நீலிக்கண்ணீர்? ஏன் அழுகிறாய்? தந்தையை எதிர்த்துப்பேசும் அளவிற்குப் பெரியவளாக ஆகிவிட்டாயா? கடவுளையே கல்யாணம் செய்துகொள்வேன் என்று பேசும் உன்னைப்பார்த்து ஊர் சிரிக்கும். பைத்தியக்காரத்தனத்தை விடு! தந்தை பார்க்கும் மணமகனைக கல்யாணம் செய்து கொள்ளுகிற வழியைப்பார்!’’ என எச்சரித்துவிட்டுத் தாயாரும் அங்கிருந்து அகன்றாள். ஆனால் கயல்கண்ணி எதையுமே பொருட்படுத்தவில்லை.
“ஏராளமான ஞானநூல்
களைக் கற்றும், அவற்றிற்கு விரிவுரை செய்தும், தெய்வ அனுபவம் என்பது இவர்களிடம் காலூன்ற வில்லையே! என்ன காரணம் பரம்பொருளே!’’ என்று இறைவனிடம் முறையிட்டாள். “எம்பெருமானே! என்னை ஏற்றுக்கொள்!’’ என்று வேண்டிக் கண்ணீர் சிந்தினாள். கைகளைக்கூப்பித் தொழுதாள். நாளாக நாளாக அடுத்தவரிடம் பேசுவதும் நின்று போயிற்று. அவளைப்பார்த்த உறவினர்கள் எல்லாம், “இவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது’’ எனப்பேசினார்கள். மகளின் நிலைகண்டு பெற்றோர்கள் மனம்வருந்தினார்கள். கயல்கண்ணியோ….வீட்டின் மேல்மாடியில் ஒரு தனி அறையைத் தனக்கென்று ஒதுக்கிக்கொண்டாள். யாரும் வந்து தொல்லை கொடுக்காதவாறு, அறையைத் தாளிட்டுக் கொண்டாள். கோயில் இருந்த திசை நோக்கித்தொழுதாள்.
“சிவபெருமானே! மதுரையில் கயல்கண்ணியை மணந்த நீ, என்னை ஏற்றுக் கொள்ளக்கூடாதா? நானும் கயல்கண்ணி தானே?’’ என உள்ளமுருகி விம்மி வேண்டினாள். நாளாகநாளாக கயல்கண்ணியின் உடல்வெளுத்து இளைத்தது.
ஒருநாள்…
காலை ஐந்து மணியிருக்கும்.“உத்தமதானர் இருக்கிறாரா?’’ எனக் கம்பீரமான குரல் கேட்டது. அதைத் தொடர்ந்து திமுதிமுவென்று ஏழு வேதியர்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள். அதற்குள் நீராடி, வைதிக கர்மானுஷ்டானங்களை முடித்திருந்த உத்தமதானர், குரல்கேட்டு வந்தவர்களை வரவேற்றார்; “நான்தான் உத்தமதானர். என்னவேண்டும்? யார் நீங்கள்?’’ எனக்கேட்டார்.
வந்தவர்கள்,“ஈஸ்வரஐயரை எல்லோருக்கும் தெரியும். அவருக்கு உங்கள் மகளைப் பாணிக்கிரஹணம் செய்துதர வேண்டும். தடையேதும் சொல்லக்கூடாது. இது தைமாதம். இன்று வியாழக்கிழமை. நாளை வெள்ளிக் கிழமையன்று திருமணம் நடக்கும். மாப்பிள்ளையுடன் இன்று இரவே வருகின்றோம். கல்யாண வேலை நிறைய இருக்கிறது. நாங்கள் வருகிறோம்’’ எனப்படபடவென்று பொரிந்துவிட்டு, வந்தவர்கள் போய் விட்டார்கள். உத்தமதானருக்கு ஒன்றுமே புரியவில்லை.
“யார் இவர்கள்? ஒருமுகம்கூட அறிமுகமான முகமாக இல்லையே! யார் ஈஸ்வர ஐயர்? திடுதிப்பென்று வந்து, நாளைக்குக் கல்யாணம் என்று சொல்லிவிட்டு, அவர்கள் பாட்டுக்குப் போய்விட்டார்கள். பிள்ளை விளையாட்டைப் போல அல்லவா இருக்கிறது. ஒருவேளை… வந்தவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்குமோ?’’ என்ற எண்ணத்தில் வெளியில் ஓடி, வந்தவர்களைத் தேடினார். கண்ணுக்கெட்டிய தூரம்வரை யாரும் இல்லை.இனம்புரியாத உணர்ச்சிகளுடன் உத்தமதானர், கோயிலுக்குச் சென்றார். வழிபாட்டை முறையாகச் செய்து முடித்தார். அலைபாய்ந்த மனம் அமைதி அடைந்தது. வீடு திரும்பத் தொடங்கினார்.
வழியில்…
ஏராளமானபேர்கள், ஊரையே அடைத்துப் பந்தல் போடும் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கிய உத்தமதானர்,“ஊரில் இன்று என்னவிசேஷம்?’’ எனக் கேட்டார். வியர்க்க விறுவிறுக்கப்பணிசெய்யும் மும்முரத்தில் இருந்த தொழிலாளர்கள், யாரும்பதில்சொல்லவில்லை. உத்தமதானர் வீட்டை நெருங்கினார். அவரது வீடும், அழகுற அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சோழ மன்னரும் மந்திரியும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கிய உத்தமதானர்,“மன்னா! என்ன நடக்கிறது இங்கே? ஏன் இப்படி?’’ எனக்கேட்டார். திடுக்கிட்டுத் திரும்பிய மன்னர், உத்தமதானரைப் பார்த்தார். உடனே தரையில் விழுந்து வணங்கினார்.
“ஸ்வாமி! மந்தாரவனேஸர் என்னையும் ஒரு பொருளாக்கி, என் கனவில் எழுந்தருளினார். உங்கள் அருமை மகளான கயல்கண்ணியை, நாளை காலை திருமணம் புரிந்துகொள்ளப் போகிறாராம் சிவபெருமான். இந்த ஊரையும் உங்கள் மாளிகையையும் நன்றாக அலங்கரிக்கச் சொல்லி உத்தரவிட்டார். இப்படிப்பட்ட உயர்ந்த பணியில் ஈடுபடவைத்த, உங்கள் குடும்பத்திற்கு நான் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்!’’ என உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லி முடித்தார் அரசர்.
உத்தமதானர் முகத்தில் இனம்புரியாத உணர்ச்சிகள் பரவின.“இது என்ன கண்கட்டுவித்தை போல இருக்கிறதே! நான் காண்பதென்ன? கனவா? நனவா?’’ என எண்ணியபடியே தன் வீட்டிற்குள் புகுந்தார். மனைவியை அழைத்து,“மங்களம்! கயல்கண்ணியை நம்முடைய மகள் என்று நினைத்தது, மாபெரும் தவறு. வா! வா!’’ என்று சொல்லி அவளையும் அழைத்துக்கொண்டு, மகளிருந்த மாடி அறைக்குச் சென்றார். அங்கே… சிந்தையெல்லாம் சிவபெருமானை நினைத்து, கண்ணுதலை எண்ணிக் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாள் கயல்கண்ணி. அந்நிலையில் மகளைப்பார்த்ததும் உத்தமதானரின் கைகள் அவரையும் அறியாமல் குவிந்தன. பெற்றோர்களைப் பார்த்ததும், கயல்கண்ணி பயத்துடன் எழுந்தாள். அவளிடம்…
“அம்மா! கயல்கண்ணி! தெரியாத்தனமாக உனக்கு உபத்திரவம் கொடுத்துவிட்டோம். குற்றவாளிகளான எங்களை மன்னித்துவிடு!’’ என, உத்தமதானரும் மங்களமும் வேண்டினார்கள்.“சிவ! சிவ!’’ என்ற வார்த்தைகள் மட்டுமே, கயல்கண்ணியிடம் இருந்து வெளிப்பட்டன. இரவு மணி பத்து ஆனது. ஆற்றூர் எனும் அந்த ஊர், தான் கொண்ட “கல்யாணபுரம்’’ என்ற பெயருக்கு ஏற்ப, கல்யாண புரமாகவே அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பூக்களால் அமைக்கப்பட்ட பந்தல்கள், தோரணங்கள். வீடுகள் தோறும் ஏராளமான விளக்குகள் ஏற்றப்பட்டு ஊரே ஜெகஜ் ஜோதியாக விளங்கியது. ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான், பிரம்மசாரி வடிவத்தில், கல்யாணபுரத்தில் காலடி வைத்தார்.
சோழ மன்னர், பூக்களால் தொடுக்கப்பட்ட மென்மையான பூப்பாயைத் தெருவெங்கும் பரப்பினார்.அதன்மேல் திரு வடிகளை வைத்து நடந்து வந்தார்ஈசன். தேவர்கள் எல்லாம், மானிட வடிவில் பின் தொடர்ந்தார்கள். வேதியர்கள், வேதகோஷம் செய்தார்கள். பெண்கள், மங்கல கீதம்பாடினார்கள். பொழுது விடிந்தது. திருமண ஏற்பாடுகள் விமரிசையாக நடந்தன. காசியாத்திரை சடங்கு நடந்தது.
“என் மகளைத் திருமணம் செய்துதருகிறேன்’’ என வணங்கி அழைத்தார் உத்தமதானர். மந்தாரவனேசர்(சிவபெருமான்) வந்து, மணப் பந்தலில் அமர்ந்தார். மங்கல ஆபரணங்களுடன் வந்து மணமகள் அமர்ந்தாள். கடைக்கண்ணால், கண்ணுதல் பெருமானைப் பார்த்தாள் கயல்கண்ணி. தேவலோகத்துப் பெண்களெல்லாம், மானிட வடிவில் தோழிப்பெண்களாக கயல்கண்ணியை நெருங்கி நின்றார்கள். திருமணத்திற்கான யாக அக்னி, வலம் சுழித்து எழுந்தது. தாரை வார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மங்கல வாத்தியங்கள் முழங்கின; மந்திரங்கள் ஒலித்தன.
மந்தாரவனேசர், மங்கை கயல்கண்ணியின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டினார். அம்மி மிதித்தல் – அருந்ததிகாட்டல் ஆகியவை முடிந்தன. அதேவிநாடியில், கயல்கண்ணி தெய்வவடிவம் பெற்றாள். அவளைப் பார்த்தவர்கள், அம்பிகையைப் பார்ப்பதுபோல உணர்ந்தார்கள். திருமண விருந்து முடிந்து, எல்லோரும் மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தார்கள். கயல்கண்ணியுடன் திருக்கோவிலுக்குள் நுழைந்தார் மந்தாரவனேசர்.
அங்கே…
அஞ்சனக் கண்ணம்மையின் திருவடிகளில் விழுந்து வணங்கினாள் கயல்கண்ணி. அவளை வாரியெடுத்து அணைத்துக்கொண்டாள் அம்பிகை. “சிவ மணத்தத்துவத்தை எல்லோரும் பெறலாம் என்பதை உலகிற்கு உணர்த்திய நீ, நீடூழி வாழ்க!’’ என வாழ்த்தினாள். “உன் அருள்தாயே!’’ என்றாள் கயல்கண்ணி. இதை அனைவரும் அறிவதற்காக, இன்றும் தை மாதத்தில் வரும் முதல் வெள்ளிக் கிழமையில், ஆற்றூர் என்னும் கல்யாண புரத்தில் இத்திருமணம் நடைபெறுகிறது. தெய்வம் திருவடி பதித்து நடந்த ஞானபூமி, நம் தேசம்!
நடை திறந்திருக்கும் நேரம்: காலை: 8:00 முதல் 11:00 வரை, மாலை: 5:00 முதல் 7:00 வரை
கோயில் அமைவிடம்: மயிலாடுதுறையில் இருந்து 19 கி.மீ., பயணித்தால் ஆத்தூரை அடையலாம். கோயில் தொடர்புக்கு: 09443504388.
V.R.சுந்தரி
