சென்னை: எதற்கெடுத்தாலும் கணக்கு பார்க்க கூடாது. உழவன் கணக்கு பார்த்தால் ஒரு படி நெல் கூட மிச்சப்படாது என்பதை உணர்ந்து தான் திமுக தலைவர் விட்டுக்கொடுத்து செல்கிறார். மேலும் இந்தியா கூட்டணியில் ஒற்றுமை வேண்டும் என்று திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் பேசியதாவது:
எதற்கெடுத்தாலும் கணக்கு பார்க்க கூடாது. உழவன் கணக்கு பார்த்தால் ஒரு படி நெல் கூட மிச்சப்படாது என்பதை உணர்ந்து தான் திமுக தலைவர் விட்டுக்கொடுத்து செல்கிறார். பீகாரில் தேர்தல் என்றால் அங்கே வாழும் தமிழர்களை, திமுக நிர்வாகிகளை, கணக்கில் கொண்டு எத்தனை தொகுதி தருகிறீர்கள் என கேட்காமல் ஓடிச் சென்று தேஜஸ்வி யாதவை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தார். பெங்களூரில் திமுக தனது தோழமையான காங்கிரசிடம் சீட்டு கேட்டு பிடிவாதம் செய்யாது. தனது ஆதரவை திமுக பிரதான கட்சியான காங்கிரசுக்கு வழங்கி, காங்கிரஸை ஆட்சி கட்டிலில் உட்கார வைத்து, பெருமைப்படுத்தியது.
புதுச்சேரியில் கூட கடந்த தேர்தலில் காங்கிரஸ் 2ல் வென்றது. திமுக 6ல் வென்றது என்றாலும், காங்கிரஸைவிட எங்களுக்கு மூன்று மடங்கு சீட் தாருங்கள் என இப்போது காங்கிரசிடம் திமுக அடம் பிடிக்கவில்லை, சமமாக நிற்கத்தான் விரும்புகிறோம். தேர்தல் நேரத்தில் எனக்கும் ஒரு சீட், அவர்களுக்கும் ஒரு சீட்டா என கேட்கக் கூடாது. 2026 தேர்தல் கூட்டணியில் அப்படித்தான் எனக்கும் ஒன்றா எனக்கேட்டு ஒற்றுமையை சிதைக்ககூடாது.
இந்திய வரலாற்றிலேயே 2011-2021 அதிமுக சம்பாதித்தது தான் அதிக பணம் என்பார்கள். ஆனால் அந்த பணம்கூட பா.ஜ. தரும் பணத்தோடு ஒப்பிட்டால், 2021ல் வறட்சியாம், 2026ல் கொட்டு கொட்டு என கொட்டுவார்களாம் அதிமுகவினர் என சொல்கிறார் உதயகுமார், இதிலிருந்து 2011-2021 வரை பத்தாண்டு காலம் சம்பாதித்தை விட 2026ல் பா.ஜ. தந்திருக்கும் பணமே அதிகம் என உதயகுமார் சொல்லி உள்ளார். பா.ஜ. தமிழர்களை எவ்வளவு மிரட்டினாலும், அதிமுக கூட்டணிக்கு பணம் கொடுத்தாலும் தேர்தலில் அதிமுக கூட்டணி டெபாசிட் பெறாது. திமுகவே 234 தொகுதியில் உறுதியாக 214-ல்வெற்றி பெறும்.
தம்பிதுரை சொல்கிறார், திமுகவில், அதிமுகவினர் தான் செயல்படுகின்றனராம். தி.மு.க.வில் ஆட்கள் இல்லாமல் சேர்க்கிறார்களாம். ஜெயலலிதா எனும் கேப்டன் இறந்தபின், தங்களுக்குள் சண்டை போட்டு, கப்பலில் ஓட்டை விழுந்து விட்டது. ஓட்டை கப்பலில் இருந்து மூழ்காமல் நீச்சல் தெரிந்தவர்கள் விவரமானவர்கள், நேர்மையானவர்கள் தப்பித்து எதிரில் வந்த கப்பலில் ஏறிவிட்டனர். தப்பித்து ஏறிவந்த மாலுமிகளை மாற்று கப்பல் கேப்டன் தாயுள்ளத்தோடு ஏற்றுக்கொண்டார். அ.தி.மு.க.விலிருந்து வந்த திறமையானவர்களை தளபதி பயன்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்கிறார். இன்று ஏகடியம் பேசுபவர்களின் அடுத்த ஆண்டு முகவரி திமுக என்பதே சரி. இவ்வாறு காசிமுத்து மாணிக்கம் கூறினார்.
