ஆப்கோன் கால்பந்து பட்டம் இழந்த செனகல் மொராக்கோ சாம்பியன்: சிஏஎப் நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு

ஜெனீவா: கடந்த ஜனவரியில் ஆப்கோன் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்ட செனகல் அணியிடம் இருந்து, பட்டம் திரும்ப பெறப்பட்டு, மொராக்கோ அணி வெற்றி பெற்றதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகள் மோதும் ஆப்ரிக்கா கப் ஆப் நேஷன்ஸ் (ஆப்கோன்) கால்பந்து போட்டிகள் மொராக்கோவில் கடந்த ஜனவரி 18ம் தேதியுடன் நிறைவு பெற்றன. கடைசி நாளில் நடந்த இறுதிப் போட்டியின் இறுதிக்கட்டம் குழப்பம் நிறைந்ததாக காணப்பட்டது. இரு அணிகளும் கோல் போடாத நிலையில் ஸ்டாப்பேஜ் நேரமாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு போட்டி துவங்கியது.

92வது நிமிடத்தில் செனகல் வீரர் அடித்த பந்து கோல் போஸ்ட் மீது பட்டு விழுந்தது. அது, ஃபவுல் என நடுவரால் கூறப்பட்டதால் செனகல் வீரர்கள் ஆத்திரத்தில் கூச்சலிட்டனர். அதன் பின் மொராக்கோ அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தபோது, செனகல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பிரச்னையை மேலும் பெரிதாக்கும் வகையில், செனகல் அணி வீரர்கள், பயிற்சியாளர் பேப் தியாவ் தலைமையில் ஸ்டேடியத்தில் இருந்து வெளியேறினர். சிறிது நேர அமளிக்கு பின், செனகல் நட்சத்திர வீரர் சேடியோ மேனேவின் அறிவுறுத்தலுக்கு பின்னர், செனகல் வீரர்கள் மீண்டும் களத்துக்கு வந்து ஆடினர். 94வது நிமிடத்தில் செனகலின் பேப் கயே ஒரு கோல் போட்டார். அதையடுத்து, 1-0 என்ற கோல் கணக்கில் செனகல் வென்றதாக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. அதேசமயம், போட்டியில் ஏற்பட்ட குழப்பத்துக்கு காரணமான இரு அணிகளுக்கும் தலா ரூ. 9 கோடி அபராதம் மற்றும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், போட்டி நடந்த சமயத்தில் ஒழுங்கீனமாக களத்தை விட்டு வெளியேறியது தொடர்பாக ஆப்ரிக்க கால்பந்து கூட்டமைப்பு (சிஏஎப்) நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அதன் முடிவில், ‘போட்டி முடிவுக்கு வரும் முன்னர் நடுவரின் அனுமதி இன்றி எந்தவொரு காரணத்துக்காகவோ, ஒரு அணி களத்தில் இருந்து வெளியேறுவது, விளையாட மறுப்பது போட்டி விதிகளின் படி தவறு. அப்படி நடந்து கொள்ளும் அணி தோற்றதாக கருதப்படும். அதன்படி, செனகல் அணி போட்ட கோல் நிராகரிக்கப்பட்டு, மொராக்கோ அணி 3-0 என்ற கணக்கில் வென்றதாக அறிவிக்கப்படுகிறது. செனகல் அணியிடம் இருந்து சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டு, மொராக்கோ அணி புதிய சாம்பியன் என முடிவு செய்யப்படுகிறது’ என, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதன் மூலம், ஆப்கோன் கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக, மொராக்கோ அணி சாம்பியனாகி உள்ளது. அதேசமயம், கடந்த 2021ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள செனகல் அணி, 2ம் முறையாக பெற்ற சாம்பியன் பட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: