எடப்பாடி-தங்கமணி மோதல் உச்சக்கட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கும் இடையே, கடந்த சில மாதமாக கடும் புகைச்சல் நிலவி வருகிறது. இதை உண்மையாக்கும் வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலையொட்டி அமைத்துள்ள தொகுதி பங்கீட்டு குழுவில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு இடம் அளிக்கவில்லை. அதிகாரம் அதிகம் இல்லாத ஊடகவியலாளர் சந்திப்பு குழுவில் தங்கமணி இடம் பெற்றுள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றிருந்த தங்கமணிக்கு, இந்த முறை எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவை கொண்டு வந்ததில் தங்கமணி முக்கிய பங்காற்றினார். டெல்லியில் உள்ள முக்கிய பாஜ அமைச்சர்களுடன் தங்கமணி நட்புறவில் இருந்து வந்தார். கடந்த வாரம் திருச்சியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட, தங்கமணி மேடையில் முன்வரிசையில் அமர்ந்திருந்தார். மோடி, தங்கமணியின் பெயரை சொல்லி அழைத்ததுடன், தட்டி கொடுத்து விட்டு சென்றார். இப்படி பிரதமரின் குட்புக்கில் இருந்தும், மாநில அரசியலில் எடப்பாடி புறக்கணிப்பதால் தங்கமணி மிகுந்த விரக்தி அடைந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட தலைநகரில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறும் வகையில், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தை நடத்தாமல், திருச்செங்கோட்டில் அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தை தங்கமணி நடத்தினார். இதில் நாமக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய செயலாளர்கள், வார்டு செயலாளர்களுக்கு அழைப்பு இல்லை. இதனால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

நாமக்கல்லை சேர்ந்த தங்கமணியின் ஆதரவாளர்களான மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் தேவி மோகன் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும், திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதன் பின்னணி குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தங்கமணிக்கும், நாமக்கல் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே, கடந்த ஓராண்டுக்கும் மேலாக பனிப்போர் நிலவி வருகிறது. குறிப்பாக கட்சியின் சீனியர்கள் பலருக்கும் கட்சி பொறுப்பு அளிக்காமல், கட்சியில் புதியதாக இணைந்தவர்களுக்கு தங்கமணி பொறுப்புகளை வழங்கினார். இதனால் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில், நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர, ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இதுபற்றி அறிந்த எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் மற்றும் நாமக்கல் தொகுதி அதிமுக நிர்வாகிகளை சேலத்திற்கு தனது வீட்டிற்கு நேரில் அழைத்து, கடந்த 6 மாதத்திற்கு முன் பேசி சமாதானப்படுத்தினார். ஆனால் அதற்கு பின்பும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு குறையவில்லை. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னரும், மாவட்ட செயலாளருக்கும், நாமக்கல் அதிமுகவினருக்கும் நடைபெற்று வரும் உச்சகட்ட மோதலால் கட்சியினர் சோர்வடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: