×

போர் சூழலில் எமிரேட்சில் இருந்து 80,886 டன் கச்சா எண்ணெயுடன் மேலும் ஒரு கப்பல் இந்தியா வந்தது: ரஷ்ய கப்பல்களும் இந்தியா நோக்கி திரும்புகின்றன

புதுடெல்லி: போர் சூழலில் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யுஏஇ) இருந்து 80,886 டன் கச்சா எண்ணெயுடன் 4வது இந்திய கப்பல் குஜராத் துறைமுகத்தை வந்தடைந்தது. இதுதவிர, சீனா நோக்கி சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் தற்போது இந்தியா நோக்கி திரும்பிவிடப்பட்டுள்ளன.

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. அங்கு 28 இந்திய கப்பல்கள் சிக்கியிருந்தன. ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் 24 கப்பல்களும், கிழக்கு பகுதியில் 4 கப்பல்களும் இருந்தன. ஈரானுடன் இந்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு பகுதிகளில் இருந்தும் தலா 2 கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறின. அதில், சிவாலிக், நந்தா தேவி எனும் இரு கப்பல்கள் 92,712 டன் எல்பிஜி எரிவாயுடன் குஜராத்தின் முந்த்ரா மற்றும் காண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்தன. மற்றொரு கப்பல் தான்சானியாவுக்கு செல்கிறது.

இந்நிலையில், ஜக் லாட்சி எனும் 4வது எண்ணெய் கப்பல் நேற்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்சின் புஜைரா துறைமுகத்தில் இருந்து 80,886 டன் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தியின் கிழக்கு பகுதி வழியாக இந்தியா வந்து சேர்ந்துள்ளது. கப்பலில் 22 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் 611 மாலுமிகளுடன் 22 இந்திய கப்பல்களும், கிழக்கு பகுதியில் 2 இந்திய கப்பல்களும் இருக்கின்றன.

மேற்கு பகுதியில் உள்ள 22 கப்பல்களில் 6 எல்பிஜி ஏற்றிச் செல்லும் கப்பல்கள், ஒன்று எல்என்ஜி டேங்கர், 4 கச்சா எண்ணெய் டேங்கர்கள், ஒன்று ரசாயன பொருட்கள் ஏற்றிச் செல்லும் கப்பல், 3 கன்டெய்னர் சரக்கு கப்பல்கள், 2 பெரிய அளவிலான சரக்கு கப்பல்களாகும். மேலும் ஒரு கப்பல் தூர்வாரும் கப்பல், மற்றொன்று சரக்கு ஏதுமின்றி காலியாக உள்ளது. 3 கப்பல்கள் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்கானவை.

இதற்கிடையே, சீனா நோக்கி சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல்களும் தற்போது இந்தியா நோக்கி திரும்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்கு ஆசியா போரைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாள் சிறப்பு அனுமதி அளித்துள்ளது. கடலில் ஏற்கனவே பயணித்து கொண்டிருக்கும் ரஷ்ய கப்பலில் இருந்து எண்ணெயை இந்தியா வாங்க முடியும்.

அதன்படி, சுமார் 7 ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் தற்போது இந்தியா நோக்கி தனது பயணத்தை திருப்பி இருப்பதாக கூறப்படுகிறது. அகுவா டைடன் எனும் ரஷ்ய கப்பல் சீனா நோக்கி சென்ற நிலையில் சீன பெருங்கடலில் திரும்பி இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த கப்பல் வரும் 21ம் தேதி நியூ மங்களூர் துறைமுகத்திற்கு வந்தடையும் என கூறப்படுகிறது. கடந்த ஜனவரியில் இந்த கப்பலில் பால்டிக் கடல் துறைமுகத்தில் உரால் வகை கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டது. சமீபத்தில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் அனுமதியை தொடர்ந்து, மீண்டும் ரஷ்ய எண்ணெயை அதிகமாக கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளது. இந்தியா தவிர ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளின் ரஷ்ய எண்ணெயை அதிகமாக வாங்கத் தொடங்கியிருப்பதால் அதன் விலை விரைவில் உயரக் கூடும் எனும் கூறப்படுகிறது.

500 கப்பல்கள் தேக்கம்
ஹார்முஸ் ஜலசந்தி அமைந்துள்ள பாரசீக வளைகுடாவில் மொத்தம் 500 டேங்கள் கப்பல்கள் சிக்கி உள்ளன. இவற்றில் 108 கச்சா எண்ணெய் டேங்கர்கள், 166 எண்ணெய் பொருட்கள் டேங்கர்கள், 104 ரசாயனம் அல்லது ரசாயன பொருட்கள் டேங்கர்கள், 52 கப்பல்கள் ரசாயன கப்பல்கள், 53 கப்பல்கள் பிற பொருட்கள் அல்லது பணிகளுக்கானவை. இந்தியா, கிரீஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் இவ்வழியை கடந்த ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. உலகளவில் எல்பிஜியில் 85-95 சதவீதம் வரையிலும், எரிவாயுவில் 30 சதவீதமும் ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழிப்பாதை வழியாக கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

போருக்கு பிறகு 89 கப்பல்கள் மட்டும் ஹார்முசை கடந்தன
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தினமும் சுமார் 100 முதல் 135 கப்பல்கள் பயணிக்கும் நிலையில் கடந்த 1 முதல் 15ம் தேதி வரையிலும் மொத்தம் 89 கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்திருப்பதாக கெப்ளர் வர்த்தக ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை ஈரானுடன் தொடர்புடையவை. போர் சூழலுக்கு மத்தியிலும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக லட்சக்கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது. அதில் பெரும்பாலானவற்றை சீனா மட்டுமே வாங்குகிறது. ஈரான் கப்பல்கள் தவிர, இந்தியா, பாகிஸ்தான், கிரீஸ் நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பத்திரமாக கடந்துள்ளன. குறுகலான இந்த நீர்வழிப்பாதை மூடப்பட்டிருப்பதாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலராக அதிகரித்துள்ளது.

Tags : India ,emirate ,New Delhi ,Gujarat ,United Arab Emirates ,UAE ,China ,Iran ,
× RELATED மாஜி காதலனை கொடூரமாக தாக்கிய மாடல் அழகி: மனநல பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு