×

வாகன சோதனையின்போது வீடியோ கிராபர் இல்லாமல் நிலை கண்காணிப்பு குழு பறக்கும் படை சோதனை: நடவடிக்கை எடுப்பாரா தேர்தல் அலுவலர்

ஆர்.கே.பேட்டை, மார்ச் 18: திருத்தணி சட்டசபை தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறல் குறித்து கண்காணிக்க, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ கிராபர் இல்லாமல் பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே, தேர்தல் அலுவலர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி சட்டசபை தொகுதியில் திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை மூன்று தாலுகா உள்ளன. இங்கு, 2.75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் அடுத்த மாதம் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் விதிமுறைகள் கடந்த 15ம் தேதி மாலையே அமுலுக்கு வந்ததால், தேர்தல் விதிமுறைகள் மீறல், பணம், பரிசு பொருட்கள் வழங்குதல், அனுமதியின்றி பேனர் வைப்பது, கட்சி கொடிகள் கட்டுவது, கலவரம் நடப்பது போன்றவைகளை தடுப்பதற்காக, திருத்தணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழி தலைமையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு என மூன்று சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த, மூன்று குழுவும் 24 மணி நேரமும் தொகுதி முழுவதும் சுழற்சி முறையில் வலம் வந்து, கண்காணித்து வருகின்றனர். ஆனால், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு போன்ற வாகனங்களில் வீடியோ கிராபர் இல்லாமல் கடமைக்காக சோதனை செய்யப்படுகிறது. ஆகையால், திருத்தணி சட்டசபை தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றுவது கேள்வி குறியாக உள்ளது. எனவே, மாவட்ட தேர்தல் அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பறக்கும் படை, நிலைக் கண்காணிப்பு குழுவில் வீடியோ கிராபர் வசதி ஏற்படுத்த வேண்டும் என தேர்தல் ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

பூந்தமல்லியில் ரூ.3 லட்சம் பறிமுதல்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி புருஷோத்தமன் என்பவர் எடுத்து சென்ற ரூ.2 லட்சம் ரொக்கம் சிக்கியது. தொடர்ந்து, பறக்கும் படையினர் விசாரித்ததில், செங்கல் சூளை வைத்திருப்பதாகவும் குவாரிக்கு பணம் கட்ட எடுத்துச் சென்றதாக தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், பூந்தமல்லியில் நேற்று முன்தினம் இரவு சுதாகர் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் பூந்தமல்லியில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் காண்பித்த பிறகு பணம் ஒப்படைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : R.K.Petai ,Tiruttani assembly ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக...