×

தெளிவு பெறுஓம்

?திரை போட்டு இருக்கும்போது சுவாமியை வழிபடலாமா?
– தேவி, மதுரை

கூடாது. பிரகாரத்தைக்கூட அப்பொழுது வலம் வரக்கூடாது. ஒரு இடத்தில் உட்கார்ந்து தியானம் பண்ணலாம். திரையைத் திறந்தவுடன் சுவாமியை தரிசனம் செய்யலாம். இது சம்பந்தமாக ஒரு அற்புதமான நிகழ்ச்சியைச் சொல்லுகின்றேன். தியாகராஜ ஸ்வாமிகள் திருமலைக்கு சுவாமி தரிசனத்திற்காகச் செல்லுகின்றார். அவர் சென்ற வேளையில் திரை போட்டிருக்கிறது. அந்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு அற்புதமான ஒரு கீர்த்தனையை இயற்றுகின்றார்.

அதுதான் கௌளிபந்து ராகத்தில் அமைந்த தெரதீய கராதா என்ற கீர்த்தனை. இதற்கு என்ன பொருள் தெரியுமா? அந்தத் திரை (வெளித்திரை) விலகுவது இருக்கட்டும்; என்னுடைய மனதிலே ஒரு திரை இருக்கிறதே, அது இறைவனை மறைக்கிறது. அந்த திரை விலகி உன்னுடைய காட்சி கிடைக்காதா? என்று அர்த்தம். திரை போட்டிருக்கும் பொழுது மனதில் உள்ள இறைவனும் காட்சி தர மாட்டான்; கருவறையில் உள்ள இறைவனும் காட்சி தர மாட்டான் என்பது இதில் உள்ள தத்துவம்.

?தேர் திருவிழாவின் தத்துவம் என்ன?
– ரா.சுந்தரேசன், குளித்தலை.

தேர்த் திருவிழா (ரதோத்சவம்) என்பது கோயில்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்வாகும். இது வெறும் விழாவாக மட்டும் அல்லாது, ஆழமான தத்துவ அர்த்தங்களைக் கொண்டது. கடோபநிஷத், மனித உடலை தேரோடு ஒப்பிடுகின்றது.

தேர் – மனித உடல்
குதிரைகள் – ஐம்புலன்கள்
கயிறு (கயிறு/கட்டுப்பாடு) – மனம்
சாரதி – புத்தி
உட்கார்ந்திருக்கும் இறைவன் – ஆத்மாமனமும் புத்தியும் கட்டுப்பாட்டில் இருந்தால், புலன்களை அடக்கி ஆத்மா இறைவனை அடையும். தேர் இழுப்பது அனைவரும் சேர்ந்து செய்யும் செயல். வாழ்க்கையில் முன்னேற ஒற்றுமை அவசியம். ஒருவரால் மட்டும் ஆன்மிக உயர்வு சாத்தியமில்லை; சமூகம் துணை நிற்க வேண்டும். தேர்த்திருவிழா என்பது ஊரில் உள்ள அனைவரும் பங்கு பெறக் கூடிய ஒரு நிகழ்ச்சி.

ஊர் கூடி தேர் இழுத்தல் என்பார்கள். தேர் என்பது மிகப் பெரியது. தனி ஒரு மனிதனால் அதை நகர்த்த முடியாது. ஊரில் உள்ள அத்தனை பேரும் சேர்ந்து வடம் பிடித்து இழுக்கின்ற பொழுது நகர்ந்துவிடும். ஒற்றுமையாக ஒரு பிரச்னையைக் கையாளுகின்ற பொழுது, எத்தனைப் பெரிய பிரச்னையாக இருந்தாலும் இறையருளால் நீங்கிவிடும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

?பூஜைக்குப் பயன்படுத்திய பூவை மீண்டும் பயன்படுத்தலாமா?
– நாகவள்ளி, சென்னை.

பூஜைக்குப் பயன்படுத்தியது நிர்மால்யம் என்பார்கள். அதனை மறுபடியும் பயன்படுத்துவது கிடையாது. ஆனால், நாம் எடுத்துச் சூடிக்கொள்ளலாம் சந்தனமாக இருந்தால் பூசிக்கொள்ளலாம். இறைவனுக்கு அணிவித்த ஆடைகளை அணிந்து கொள்ளலாம். இதை பெரியாழ்வார் “உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு; தொடுத்த துழாய் மலர் சூடி களைந்தன சூடுமித் தொண்டர்களோம்’’ என்று பாடுகின்றார். துளசி போன்ற இலைகளை (பத்ரம்) திரும்பத் திரும்பப் பூஜைக்குப் பயன்படுத்தலாம். அதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது.

?“ஓம்’’ என்ற பிரணவத்தோடு மந்திரம் சொல்லக்கூடாது என்பது சரியா?
– கார்த்திக் ராஜா, சேலையூர்.

குரு உபதேசமாகக் கேட்ட மந்திரங்களைத்தான் பிரணவத்தோடு சொல்ல வேண்டும் என்பார்கள். பிரணவத்தோடு சேராத இறைவனின் நாமங்களை மந்திரசேஷம் என்பார்கள். மந்திரசேஷம் சாதாரணமான விஷயம் அல்ல. உதாரணமாக “ஓம் நமோ நாராயணாய’’ என்பது திருமந்திரம். இதில் பிரணவம் இருக்கிறது. குரு முகமாகத்தான் இதனைக் கேட்க வேண்டும். ஜபம் செய்ய வேண்டும். ஆனால், “நாராயணா’’ என்று யார் வேண்டுமானாலும் ஜபம் செய்யலாம். சங்கீர்த்தனம் செய்யலாம். அதற்கும் முழு பலன் உண்டு. இதை திருநங்கையாழ்வார் ஒரு பாடலிலே அற்புதமாக எடுத்துக்காட்டுகின்றார்.

“குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினுமாயின செய்யும்
நலந்தரும் சொல்லை
நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்’’

?உண்மையான மகிழ்ச்சி எப்பொழுது ஏற்படும்?
– பானுமதி, இராமநாயக்கன்பாளையம்
யாருக்காவது கொடுத்து உதவும் பொழுது உண்மையான மகிழ்ச்சி ஏற்படும். பொதுவாகக் கொடுக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி பெறும் பொழுது கிடைப்பது கிடையாது.

?குறிக்கோளை அடைய என்ன வழி?
– சக்திகுமார், ஸ்ரீரங்கம்.

விடாமுயற்சியோடும் நம்பிக்கையோடும் செயல்படுவது ஒன்றே வழி. இப்படி செயல்படுவது தவம் என்று சொல்லப்படும்.

?பொறாமை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
– தேவிகலா, நாமக்கல்.

ஒருவனுக்கு தன்னம்பிக்கையும் தனித்திறமையும் இருந்தால் பொறாமை என்ற உணர்வு வராது.

?ஆன்மிகத்தால் அடையக்கூடிய அதிகப்பட்ச பலன் என்ன?
– வாசுகி ராஜரத்னம், காஞ்சிபுரம்.

மன அமைதி. மனத் தெளிவு. இந்த இரண்டும் இருந்து விட்டால், எது நல்லது எது கெட்டது என்பதைப் பிரித்துப் பார்க்க முடியும். பிரித்தறியும் ஆற்றல் வந்துவிட்டால் கெட்டதை விட்டு விலகி நல்லவற்றைப் பற்றி கொண்டு வாழ முடியும். அதற்குப் பிறகு வாழ்க்கையில் துன்பம் வருவதற்கு வழி இல்லை.

?அஷ்டமச் சனி எல்லோருக்கும் கஷ்டத்தைத் தருமா?
– பாலாஜி, தஞ்சை

இப்பொழுது சனிப் பெயர்ச்சி வருவதால், இப்படி நினைக்கத் தோன்றுகிறது. அஷ்டமச் சனி எல்லோருக்கும் கஷ்டத்தைத் தராது. உதாரணமாக, இப்பொழுது சிம்ம ராசிக்காரர்களுக்கு மீனத்தில் உள்ள சனி அஷ்டமச் சனியாகச் செயல்படும். ஆனால், சிம்ம ராசிக்கு ஆறாம் அதிபதியாகவும் சனி இருக்கிறார். ஆறுக்குரியவன் எட்டில் மறைகின்ற பொழுது நன்மையைத் தானே செய்வார். “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

அடுத்து சிம்ம ராசியில் ராசிக்கு லாபஸ்தானத்தில் குரு இருக்கின்றார். அது ஒரு பலம். குரு பெயர்ச்சி நடந்து விரய குருவாக மாறிவிட்டாலும்கூட அவருடைய பார்வை தன்னுடைய சொந்த ராசியாகிய மீன ராசியில் விழுந்து அஷ்டமச் சனி தோஷத்தைக் கட்டுப்படுத்தும். எனவே நீங்கள் அஷ்டமச் சனி கண்டச்சனி என்றெல்லாம் அச்சப்பட வேண்டியது இல்லை. நடப்பது நாராயணன் செயல் என்று பகவான் மீது பாரத்தைப் போட்டு விட்டு விழிப்புணர்வோடு இருங்கள்.

?பிள்ளையாரைப் பிடிக்கும் பொழுது மண், சந்தனம், மஞ்சள் என்று பிடிக்கிறோமே, அதைப்போல லிங்கத்திற்கும் வெவ்வேறு பொருள்களில் பிடித்து பூஜை செய்யலாமா?
– ஸ்ரீதிவ்யா, காரைக்குடி

தாராளமாகச் செய்யலாம். சந்தனத்தால், பூக்களால், வெண்ணெயால், பசு சாணி மற்றும் மஞ்சளால் லிங்கம் செய்து வழி படலாம். ஒவ்வொரு லிங்க வழிபாட்டிற்கும் ஒவ்வொரு விதமான பலன் உண்டு. அன்னத்தால் லிங்கம் செய்து வழிபட்டால் உணவு குறைவின்றிக் கிடைக்கும் என்பார்கள்.

?ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் வேறுபாடு உண்டா?
– தாமோதரன், போளூர்.

வேறுபாடு உண்டு. நாம் பல விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறோம். ஏதாவது ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்று யோசித்துப் பார்த்தால் விடை தெரியும். பல பிரச்னைகள் அறிந்து கொள்ளாததால் வருவதில்லை; புரிந்து கொள்ளாததால்தான் வருகின்றன. விஷயத்தை புரிந்து கொள்ளாமல் இருத்தல், தவறாகப் புரிந்து கொள்ளுதல், விபரீதமாகப் புரிந்து கொள்ளுதல் என்று பல நிலைகள் உண்டு.

?ராமாயணத்தைவிட மகாபாரதம் மட்டும் ஏன் நம்மை அதிகம் கவர்கிறது?
– ரித்விக் பிரசாத், சென்னை.

ராமாயணம் என்பது ஒரு லட்சிய காப்பியம். உதாரணமாக உலக சகோதரத்துவத்தை அது சொல்கிறது. ராமாயணத்தில் உள்ள சில விஷயங்கள் நடைமுறை எதார்த்தத்திற்குச் சாத்தியமா என்று யோசித்துப் பார்த்தால் கஷ்டம்தான். ஆனால் மகாபாரதம் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலும் உலகத்தில் உள்ள எல்லா மக்களின் குணாதிசயங்களையும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

பங்காளி சண்டை இல்லாத இடம் எது? நம்மிடையே துரியோதனன் இருக்கின்றான்; அர்ஜுனன் இருக்கின்றான்; பீமன் இருக்கின்றான்; சகுனி இருக்கின்றான்; திருதராஷ்டிரன் இருக்கிறான்; விதுரன் போன்றவர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் மனிதர்களின் மாற்ற முடியாத பல மன நிலைகளை, பாத்திரங்களாகப் பிரதிபலிப்பது மகாபாரதம் என்பதால் மக்களுக்கு ராமாயணத்தைவிட நெருக்கமானதாக இருக்கிறது.

?யார் ஆசிரியர்? யார் மாணவன்?
– கணபதி, கும்பகோணம்.

கற்றுக்கொள்ள விரும்புபவன் யாராக இருந்தாலும் மாணவன்தான். கற்றுக் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆசிரியர்கள்தான். சில நேரங்களில் ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களிடமே சில விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காகச் செல்வதுண்டு.

?ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
– மு.ராஜராஜன், திருமங்களம்.

ஒவ்வொரு நாளின் மகிழ்ச்சி என்பது அன்றைக்கு காலையில் நாம் எந்த மனநிலையில் படுக்கையை விட்டு எழுகிறோம் என்பதில் தொடங்குகிறது. தொடக்கம் நன்றாக இருந்தால் நாளும் நன்றாக இருக்கும். ஆகையினால் படுக்கையை விட்டு எழுகின்ற பொழுது பிரார்த்தனை செய்யுங்கள். மன மகிழ்ச்சியோடு இருங்கள். உற்சாகமாக எழுங்கள். சிரித்துப் பேசுங்கள். இந்த கலகலப்பும் சிரிப்பும் உங்களை அந்த நாள் முழுவதும் நல்ல நிலையில் உற்சாகமாக வைத்திருக்கும். பிரச்னைகள் வந்தாலும்கூட அதனைத் தெளிவாகச் சமாளிக்கும் வழிமுறைகள் உங்களுக்குத் தோன்றும்.

?ஏகாதசியில் இரண்டு ஏகாதசிகள் காலண்டரில் போட்டிருப்பது போல அமாவாசையிலும் இரண்டு அமாவாசை வருகிறதே?
– வே.சிதம்பரம், தேனி.

ஆம். சர்வ அமாவாசை என்று ஒரு தினத்தையும் அதற்கு முதல் நாளில் போதாயன அமாவாசை என்றும் போட்டு இருப்பார்கள். சில குறிப்பிட்ட சூத்திரக்காரர்கள் (போதாயன சூத்திரக் காரர்கள்) போதாயன அமாவாசையை அனுஷ்டிப்பார்கள். மற்ற எல்லாருமே சர்வமாவாசை தினத்தைத் தான் அனுஷ்டிப்பார்கள். சதுர்த்தசியோடு அமாவாசை கலந்தால் அது போதாயன அமாவாசை. முழுமையாக அமாவாசை அல்லது அதில் கொஞ்சம் பிரதமையும் சேர்ந்தால் அது பொதுப்படையான சர்வ அமாவாசை தினம்.

?முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யும் பொழுது அந்த நாளில் இரண்டு திதிகள் இருந்தால் எந்த திதியில் சிரார்த்தம் செய்வது?
– பிந்துமாதவராவ், சேலம்.

ஒன்றும் கவலைப்பட வேண்டாம். பஞ்சாங்கத்தில் இரண்டு திதிகள் வந்தால் எந்த திதி சிரார்த்த திதி என்று போட்டிருப்பார்கள். அந்த திதி அனுசரித்து சிரார்த்தம் செய்யவும்.

?கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ யாரைப் பிரார்த்தனை செய்ய வேண்டும்?
– பகவதி பெருமாள், மார்த்தாண்டம்.

கடன் இல்லாமல் வாழ்வதற்கு முதலில் நாம் நம்முடைய வாழ்க்கையை சிக்கனமாகவும் சரியாகவும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். வரவுக்குள் செலவு செய்பவன் ஏன் கடன் வாங்கப் போகிறான்? அப்படியும் சில எதிர்பாராத சந்தர்ப்பங்களில் கடன் வந்துவிடும். அப்படி வருகின்ற பொழுது அதை இறையருளோடு, நன்றாக உழைத்து தீர்த்துவிடலாம். நம்முடைய உழைப்புக்கு துணை சேர்ப்பது நரசிம்மர் துதி. சாயங்காலம் பிரதோஷ வேளையில் ருண விமோசன ஸ்தோத்திரம் என்று ஒரு சிறிய பாராயண ஸ்லோகத் தொகுப்பு இருக்கிறது. இதனை பாராயணம் செய்யுங்கள். உங்களுக்கு கடன் தீரக்கூடிய நல்வழிகள் புலப்படும்.

தேஜஸ்வி

Tags : Swami ,Devi ,Madura ,Thiagaraja ,
× RELATED அரை நிமிடத்தில் போரை முடிப்பேன்…