சென்னை: மறைந்த தலைவர்களின் உருவச் சிலைகளை மறைக்கத் தேவையில்லை என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அமலுக்கு வந்தது. இந்த நிலையில், தமிழக அரசு காபந்து அரசாக அதிகாரம் குறைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர், அமைச்சர்கள், மறைந்த தலைவர்கள் படங்கள் மற்றும் அரசின் சாதனைகள் தொடர்பான புகைப்படங்களும் அகற்றப்பட்டது.
மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட காமராஜர், அறிஞர் அண்ணா, பெரியார், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டது. நேற்று அரசியல் கட்சி தலைவர்களோடு தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அப்போது சிலைகளை மறைக்க வேண்டாம் என திமுக, சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைத்த மறைப்புகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கப்பட்டிருந்தால் அதனை அகற்றும் படி தெரிவித்துள்ளது.
