சென்னை: தமிழகத்தின் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ஒப்புதல் பெற்றிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கீழடியில் 11வது கட்ட அகழாய்வு நடத்த மாநில தொல்லியல் துறைக்கு ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கீழடி உள்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்த ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 5 இடங்கள், தற்போது 8 இடங்களையும் சேர்த்து ஒரே ஆண்டில் 13 இடங்களில் அகழாய்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் ஒரே ஆண்டில் அதிக இடங்களில் அகழாய்வு நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. அடுத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்!” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்
